| உயிர்மை பனுவலில் கடந்த செப்டம்பர் மாத பனுவலிருந்து 'போரும் வாழ்வும்' கட்டுரை வெளிவந்து கொண்டிருக்கிறது | தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

Wednesday, September 29, 2010

பலி நகரத்தின் இரவுகள்


இலங்கை இராணுவத்தின் ஷெல்கள் முகமாலையை நோக்கி சென்று கொண்டிருக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் ஷெல்கள் முகமாலை எல்லையை கடந்து வந்து விழுந்து கொண்டிருந்தன. யாழ்ப்பாணம் அதிர்ந்து கொண்டிருந்தது. நானும் சீலனும் எங்கள் அறைக்கு அவசர அவசரமாக திரும்பிக் கொண்டிருந்தோம். மக்கள் பெரும் பதைபதைப்புகளுடன் வீடுகளை நோக்கி விரைந்தார்கள். யாழ் நகரம் சட்டென வெளித்துப் போனது. புலிகள் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பரவலான பல தாக்குதல்களை தொடங்கினார்கள். முகமாலையிலிருந்தும் கிளாலியிலிருந்தும் நாகர்கோவிலிலிருந்தும் களமுனைகளை திறந்ததுடன் மண்டைத் தீவுப் பகுதியில் தரையிறக்கம் ஒன்றையும் செய்து கொண்டார்கள். படையினர் இவற்றை முற்கூட்டியே அறிந்து வைத்தமாதிரி அவற்றை எதிர் கொண்டு தமது களங்களை திறந்து விட்டனர். யாழ் குடா நாடு அபாயம் பொருந்திய நிலமாக மாறியது.

அன்றிலிருந்துதான் ஈழத்தின் நலாம் கட்ட யுத்தம் வெளிப்படையாக மிகப் பெரிய பலிகளின் வரலாறாக நகர தொடங்கியது. மாவிலாற்றைக் கைப்பற்றிய அரசு வெற்றியின் ருசியுடன் யுத்தத்திற்காக எதிர் பார்த்துக் கொண்டிருந்தது. புஇராணுவம் பதில் தாக்குதல் என்று சொல்லிக் கொண்டு பாரிய யுத்தத்தை தொடங்கி வைத்தது.

நானும் சீலனும் அறைக்கு வந்து கொண்டிருந்தோம். சூரி அறையில் தனியே இருந்தான். யுத்தம் தொடங்கி விட்டது என்று பதைபதைத்தபடி வெளியில் சென்ற எங்களுக்காக பார்த்துக் கொண்டிருந்தான். நாங்கள் மூவரும் அறைக்குள் போனதும் இந்தச் செய்தியை உறவினர்களுக்கு அறிவிக்க கைத் தொலைபேசிகளை எடுத்த பொழுது தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரமும் முழுமையாக தடைப்பட்டது. ஷெல்கள் பெரு அதிர்ச்சியுடன் யாழ் நகரத்தின் மேலாக உலவிக் கொண்டிருந்தன. யாழ் நகரத்திலிருந்தும் படையினர் கடுமையான ஷெல் வீச்சை தொடங்யிருந்தனர். அதனால் காதுகளை கிழிக்குமளவு ஷெல் சத்தம் மிகுந்திருந்தது. அறையில் எந்தப் பொருட்களும் இல்லை. அன்றைய தேவைக்காக வாங்கி வந்த உணவு மட்டுமே இருந்தது. அதையும் சாப்பிடும் மன நிலை இருக்கவில்லை. யாழ்ப்பாணமே பாரிய யுத்த கமாக மாறப் போகிறது என்று பேரதிர்ச்சியாக இருந்தது. எங்கு என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. நாங்கள் கொக்குவில் பொற்பதி வீதியில் இருக்க தர்ஷன் என்ற எங்கள் வகுப்பு நண்பன் பலாலி வீதியில் ஒரு அறையில் தங்கியிருந்தான். ஒருவரை ஒருவார் நினைத்து என்ன நடக்கிறதோ என்ற பதைபதைப்பில் பேசிக்கொண்டு இருந்தோம்.

எல்லா வானொலி அலைவரிசைகளும் துண்டிக்கப்பட்டன. யாழ் வானொலி என்ற பலாலியில் அமைந்திருக்கிற படையினரில் யாழ் எப்.எம். என்ற வானொலியில் முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிக்கையை திரும்பத் திரும்ப அந்த வானொலி அறிவித்துக் கொண்டிருந்தது. கடுமையான இருட்டு. மெழுகு திரிகளும் இல்லை. ஒருவருக்குப் பக்கத்தில் ஒருவர் பெரும் பயத்துடன் படுத்துக் கிடக்கிறோம். பலாலி வீதியால் வாகனங்கள் இரையும் பாரிய சத்தங்கள் கேட்கின்றன. இரவு இரவாக தூக்கம் வரவில்லை. இலேசாக கண் தூங்கும் பொழுதெல்லாம் ஷெல்கள் அடிக்கும் சத்தம் வந்து திடுக்கிடச் செய்கின்றன. அன்றில் இருந்து யாழ் நகரம் மாபெரும் இருளில் மாபெரும் பசியில் மூடப்பட்டு துயர் நிறைந்த குடாவாக மாறத் தொடங்கியது.

புலிகள் மண்டைத்தீவுப் பகுதியில் தரரயிறங்கி தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. பாசையூர், குருநகர் பகுதிகிளிலிருந்து மக்கள் வெளியேறி யாழ்ப்பாணம் சென்மேரிஸ் ;பேராலயம், அடைக்கலமாதா கோயில், சென் பற்றிஸ் கல்லூரி, சென் சால்ஸ் கல்லூரி முதலியவற்றிலும் அல்லைப்பிட்டி சென் பிலிப்பு தேவாலயத்திலும் தஞ்சமடைந்தார்கள். அவர்கள் கடுமையான அச்சத்திலும் பீதியிலும் இருந்தார்கள். யாழ்பாணத்தை புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை அனேகமான மக்கள் விரும்பிய பொழுதும் அந்த தாக்குதல் தோல்வியை கொடுத்ததால் விடுதலைப் புலிகள் தமது தளங்களுக்கு பின்வாங்கிச் சென்றார்கள். தாக்குதல்ள் வெற்றியளிக்கின்றன என்ற 'புலிகளின் குரல்' என்ற வானொலி பின்னர் சோர்வடைந்து கொண்டு போனது.

இந்த நாட்களில்; மூதூர் பகுதிக்கு விடுதலைப் புலிகள் படையெடுத்துச் சென்று தாக்குதல்களில் ஈடுபட்டபோது பல்லாயிரக் கணக்கான முஸ்லீம்கள் அகதிகளாகி பல்வேறு துன்பங்களைச் சுமந்தார்கள். சித்திரவதைகளுக்கும் இடர்பாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். இறுதியில் புலிகள் மூதூரை விட்டு வெளியேறினார்கள். இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் சொத்தழிவுகளுடன் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். யுத்தின் பீதி மக்களை நெருக்கங்கத் தொடங்கியது. மூதூரில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையிருந்ததால் விடுதலைப் புலிகள் பலத்துடன் இருக்கிறார்கள் என்ற நிலலைப்பாடு ஒரு புறம் பரவிக் கொண்டிருந்தது. அத்தோடு திருகோணமலை கடல் தளத்திற்கும் சம்பூரிலிருந்து விடுதலைப் புலிகள் ஷெல்களை ஏவியிருந்தார்கள். பலாலி விமானத்தளத்திலும் புலிகள ஏவிய ஷெல்கள் வந்து விழுந்தன.

யாழ்ப்பாணத்தில், அல்லைப் பிட்டியிலும் மண்டை தீவு கடற்கரைப் பகுதிகளிலும் கடுமையான சண்டைகள் நடைபெற்றன. அங்கு சென் பிலிப்பு தேவாலயத்தில் தங்கியிருந்த மக்களில் 25 பேர் ஷெல் தாக்குதலில் மிகக் கோராமாக கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் அந்தக் கோயிலில் தஞ்சமடைந்திருந்தார்கள். யுத்தம் மூளுவதற்கு முன்பாகவே அல்லைப் பிட்டியில் ஒரு குடும்பம் பரிதாபகரமாக வெட்டி கொலை செய்யப்பட் பின்னர் அந்தக் கோயிலில் மக்கள் நாள்தோறும் இரவில் ஒன்றாக தங்குவார்கள். அப்படியான பாதுகாப்பற்ற நிலையும் அச்சமான இரவுகளையும் கவனிக்கப்படாத நிலமைகளையும் அல்லைப்பிட்டி கடந்த பல வருடங்களாக கண்டு வருகிறது. யாழ் நகரத்திற்கு தூரத்தில் உள்ள தீவாக இருக்கும் இந்தப் பகுதி மக்கள் பலர் இத் தாக்குதல் தருணத்தில் அறியப்படாமல் படு கொலை செய்யப்பட்டார்கள். யுத்தம் ஓரளவு அடங்கிய பின்னர் அவர்களில் பலர் தேடப்பட்ட பொழுது காணாமல் போயிருந்தார்கள் என்று தெரிய வந்தது. இரத்தமும் சதையுமான முகத்துடன் அல்லைப்பிட்டி காணப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் மீதான யுத்த முற்றுகையின் பின்னர் யாழ்ப்பணம் எதிர் கொண்ட அவலங்கள் சொல்லில் அடங்காதனவாக நினைவில் வருகின்றன. யுத்தம் தொடங்கிய மறுநாள் காலை ஊடரங்கு சட்டம் நீக்கப்படலாம் என எதிர் பார்த்திருந்தோம். வனொலியுடன் இருந்து படையினரின் யாழ் எப்.எம்மை கேட்டுக் கொண்டிருந்தோம். ஊடரங்கு தளர்த்தப்படும் அறிவித்தல் எதுவும் இல்லை. ஊடரங்கு தொடர்;ந்து அமுலில் இருக்கும் என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கள் அறைக்கும் வீதிக்கும் இடையில் 50 மீற்றர் தூரம்தான் இருக்கும். அந்த வீதியைகூட எட்டிப் பார்க்க முடியாத நிலையிலிருந்தோம். யுத்தம் தொடங்கிய பீதியில் படைகள் சுட்டுத் தள்ளி விடுவார்கள் என்பதால் உள்ளேயே அடங்கியிருந்தோம். சாப்பாடு எதுவும் இல்லை. மதிய நேரம் ஆகியது. கொஞ்ச அருசி இருந்தது. அதைக் கழுவி அதன் தண்ணீரைக் குடித்தோம். பின்னர் அதை அவிய வைத்து வெறும் சோற்றை சாப்பிட்டோம். தொடர்ந்து கொண்டிருக்கும் ஊரடங்கில் மாற்ற மில்லை. இரவாகிறது. இரவுச் சாப்பாட்டிற்காக, பக்கத்தில் இருந்த ஒரு அம்மாதான் சில ரொட்டித் துண்டுகளை கொண்டு வந்து தந்தார். முகமாலையை நோக்கி செல்லும் ஷெல்கள் குறைந்த பாடில்லை. அந்த சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன.


அடுத்த நாளும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று காத்திருக்கிறோம். திடீரென இரண்டு மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று படையினர் வானொலி ஊடாக அறிவித்தார்கள். அப்பொழுது நாங்கள் மூவரும் வெளியில் புறப்பட்டு பல்கலைக் கழகத்திற்கு வந்தோம். மக்கள் அடைத்து வைத்து விட்டு கூடுகளை திறந்து விட்ட பொழுது வெளியில் கூட்டம் கூட்டமாக அலைந்தனர். தமக்குத் தேவையான பொருட்களுக்காக கடைகளில் வரிசைகள் இட்டு அலைந்தனர். அப்பொழுதுதான் செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 60 பேர் வரையில் கொல்லப்பட்டார்கள் என்ற பெரு அதிர்ச்சி தரும் செய்தியை அறிந்தோம். பல பல்கலைக்கழக மாணவர்களின் சகோதரர்கள் உறவினர்கள் அவர்களில் இடம் பெற்றதாக தகவல்களை கேட்டு மாணவர்கள் துடித்து அழுது கொண்டிருந்தார்கள். கைத் தொலை பேசிகள் துண்டிக்கப்பட்ட பொழுதும் சில கம்பித் தொலை பேசிகள் இயங்கிக் கொண்டிருந்தன. மாணவர்கள் முதல் மக்கள் வரை தொலைபேசி எடுப்பதற்காக பெரும் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். உயிருடன் இருக்கிறேன் என்பதை அறிவிக்கும் விதமாக ‘நான் நலமாக இருக்கிறேன்’ என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பதைபதைப்பு, அழுகை என்று தொலைபேசியில் துயர் வழிந்து கொண்டிருந்தது. நான் கிளிநொச்சியில் உள்ள எனது ஆசிரியருக்கு தொலைபேசி எடுத்து நான் நலமாக இருக்கிறேன் என்ற செய்தியை அம்மாவுக்கு சொல்லும்படி அறிவித்தேன். அந்த தொலைபேசிக்காக காத்துக் கொண்டு கதைத்து முடிக்கவே இரண்டு மணித்தியாலங்களும் தீர்ந்து விட்டன.

இராண்டு மணித்தியாலங்களுக்குள் எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு திரும்பியாக வேண்டும். சில மாணவர்கள் தொலைபேசி எடுக்காமல் எந்தப் பொருட்களும் வாங்காமல் அறைக்கும் விடுதிக்கும் திரும்பினார்கள். பல்கலைக்கழக சூழலில் மாணவர்கள் எல்லோரும் என்ன நடக்கப் போகிறது என்று பதைபதைத்து நின்ற பின்னர் கலைந்தார்கள். பல்கலைக்கழக வங்கி திறக்கப்பட்டபோது அதிலிருந்து பணத்தை எடுத்து வந்து கடைகளுக்கு போன பொழுது சீனி முடிந்து போயிருந்தது. அருசியும் முடிந்து போயிருந்தது. ஒருவாறு அலைந்து நூறு ருபாவுக்கு அரைக்கிலோ சீனியும் நூறு ருபாவுக்கு ஒரு கிலோ அருசியும் மட்டும் வாங்கிக்கொண்டு வந்தோம்.

நேரம் மிக விரைவாக முடிந்து போனது. மீண்டும் அறைக்குள் வந்து அடங்கினோம். வானொலியில் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வருவது பற்றிய அறிவிப்பு தொடங்கியது. மீறுபவர்கள் மீதான நடவடிக்கை ஞாபகப்படுத்தப்பட்டது. அடுத்த நாள் 15.08.2006 அதேபோல இரண்டு மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அவ்வேளையில் மீண்டும் எதாவது பொருட்களை வாங்கி வருவதற்காக நாங்கள் வெளியில் சென்றோம். மக்கள் அதே மாதிரி கூடுகளை விட்டு வெளியில் வந்து பொருட்களுக்காய் அவதிப்பட்டு அலைந்தார்கள். தொலை பேசிகளுக்காய் காத்திருந்து திரும்பினார்கள். அன்று நாங்கள் மூவரும் அறைக்கு திரும்பினோம். அன்று பலாலி வீதியில் அறையில் இருந்த நேசதர்ஷன் எங்களுடன் சேர்ந்திருப்பதற்காக எங்கள் அறைக்கு வந்தான். பலாலி வீதியால் எப்பொழுதும் ஆயுதங்களை ஏறறிச் செல்லும் கனகரக வாகனங்கள் செல்லும் சத்தத்தால் அவன் மிக பயந்து போயிருந்தான்.

அறையில் தேனீர் தயாரித்துக் கொண்டிருந்தோம். மதிய உணவுக்காக அருசி வேகிக் கொண்டிருந்தது. எங்கள் வீதியை அண்மித்தபடி துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டு வந்தது. சீலனும் சூரியும் வெளியில் வந்து பார்த்தார்கள். நானும் என்ன நடக்கிறது என்று வெளியில் வந்து பார்த்தேன். துப்பாக்கிச் சூடு மிக அண்மித்தது. இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தார்கள். அவர்களின் பின்னால் ஒரு வயது முதிர்ந்த ஐய்யா வந்து கொண்டிருந்தார். தம்பி பின்னால் வருகிறார்கள்! என்று அந்த ஐய்யா அந்த இளைஞர்களைப் பார்த்து கூறினார். பக்கத்தில் நின்ற சீலன் என்ன அண்ணன் சத்தம் கேட்கிறது என்று கேட்கிறான். அவர்களுக்கு பின்னால் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் வந்து கொண்டிருக்க முதலில் வந்த இளைஞர்களது மோட்டர் சைக்களில் திடீரென எங்கள் வாசலில் நின்று விடுகிறது. அந்த இரண்டு இளைஞர்களும் எங்களை நோக்கி தமது துப்பாக்கிகளை திருப்பினார்கள். அதிர்ச்சிகளாலான அந்த துளி நேரத்தில் நாங்கள் திரும்பி வீட்டின் பின் பக்கமாக ஓடினோம். சன்னங்கள் சுவர்களில் மோதி விழுகின்றன. சனங்கள் எங்களை துளைத்துக் கொண்டு போவதைப் போலிருந்தன. வீட்டின் பின் பக்கத்தால் வந்து மீண்டு உள்ளே போயிருந்தோம். சன்னங்கள் எங்காவது துளைத்திருக்கிறதா என்று பார்த்தோம். யாருக்கும் எதுவுமில்லை. மூலையில் அமர்ந்து ஆள் ஆளாக பார்த்தோம் உயிருடன் இருக்கிறோம் என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. நேதர்ஷனுக்கு பயத்தில் காய்ச்சலே வந்து விட்டது. முன் அறையில் இதுவரை தங்கியிருந்த நாம் அது பாதுகாப்பற்றது என்பதால் பின்னறையில் அப்பொழுது முதல் பதுங்கியிருந்தோம். வீட்டுக்கார அம்மம்மா இயல்பாக தன் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

பின்னறையில் போய் அமர்ந்து கொண்டு யார் அவர்கள்? ஏன் எங்களைச் சுட்டார்கள்? முதலில் வந்தது யார்? பிறகு வந்தது யார்? என்று கேள்விகளை மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்தோம். முன்னுக்கு வந்தவர்கள் எங்களைச் சுட்ட பொழுது பின்னால் வந்தவர்கள் அவர்களைச் சுட்டார்கள் அதனால் அவர்கள் பதறியதில் அவர்களது குறி தப்பிப் போனது என்று பேசிக் கொண்டிருந்தார்கள் தர்ஷனும் சூரியும். அவர்கள் யாரென்று தெரியவில்லை. அவர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன. அவற்றால் சுட்டால் யார் வேண்டுமானாலும் கொலை செய்யப்படுவார்கள்.

பின்னர் வானொலியை திறந்த பொழழுது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கும் விளையாட்டு மைதானத்திற்கும் இடையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் அறிவித்தன. அவர்கள் யார் என்பதை அந்த வானொலி அறிவிக்கவில்லை. யாராக இருக்கும் என நெஞ்சம் அவதிப்பட்டது. பேரச்சமான நிலை ஏற்பட்டது. எமது மாணவர்களை சுட்டு விட்டு ஓடி வந்த துப்பாக்கிதாரிகளைத்தான் பின்னால் வந்த இளைஞர்கள் துரத்திக் கொண்டு வந்ததாக அந்த முதியவர் மீள வந்து சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் எமது அறையின் முன்னால் விட்டுச் சென்ற மோட்டர் சைக்கிளை மாலை ஜன்னலை கொஞ்சமாக திறந்து பார்த்த பொழுது காணவில்லை. நாங்கள் முதலில் இருந்த அறையின் சுவர்களை கதவுகளை எல்லாம் சன்னங்கள் துளைத்திருந்தன.

அன்றிரவு மிகப்பெரிய அச்சத்துடன் வந்தது. யாரும் யாருடனும் பேசாமல் சத்தமிடாமல் மிக மௌனமாக இருக்கிறோம். மிகக் கொடிய அச்சுறுத்தல்களை கொண்டு வரும் இருளால் நிறைந்தபடி அந்த இரவு கழிந்து போனது. மறு நாள் பல்கலைக்கழக விடுதிக்கு சென்று விடலாம் என நினைத்துக் கொண்டிருந்தோம். காலையில் வானொலியை திறந்து ஊரடங்கு தளர்த்தப்படும் என எதிர் பார்த்துக் கொண்டிருந்தோம். தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என்ற அதே அறிவித்தல்தான் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அன்று ஊரடங்கு தளர்த்தப்படவில்லை. காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனோம். ஊரடங்கு நேரத்திலும் உடுப்புப் பைகளை தூக்கிக் கொண்டு பல்கலைக்கழக விடுதிக்கு செல்ல புறப்பட்டு வீதியில் இறங்கினோம். துப்பாககிளை ஏந்தியபடி படையினர் வீதியால் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மறுபடியும் அவற்றை திருப்பிக் கொண்டு அறைக்கு திரும்பினோம். சில வேளை மாலை நேரமாய் தளர்த்தப்படலாம் என காத்திருந்தோம். தர்ஷன் காய்ச்சலால் பனடோல்களை போட்டுக் கொண்டிருந்தான். பக்கத்தில் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகளில் கொண்டு கொஞ்சத்தை எங்களுக்கு தந்து கொண்டிருந்தார்கள். முன்பிருந்த அதே அச்சங்களுடன் அந்த இரவும் கழிந்து போனது.

மறுநாள் பல்கலைக்கழகத்திற்கு சென்றோம். அந்த மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களின் குருதி கொட்டி காயாமல் கிடந்த அதே தெருவால் நாங்கள் சென்றோம். பல்கலைக்கழகத்திற்கு சென்ற பொழுதுதான் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் யார் என்று தெரிய முடிந்தது. எட்வேட் அருள் என்ற எமது வருட மாணவன் பெரும் சோகத்துடன் சொல்லிக் கொண்டிருந்தான். விடுதியில் உணவில்லை. உணவகக்காரர் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். பசியில் இருந்த பொழுது மாணவர்களுக்கு கஞ்சி காயச்சி கொடுத்து விட்டு அந்த மாணவர்கள் மேலதிக தேவைக்ககாக பிஸ்கட்டுக்களை வாங்குவதற்காகவே வெளியில் சென்றார்கள். அவர்கள் வெளியே சென்று சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சுடுகள் நடைபெற்றன. அவர்கள் திரும்பவில்லை. அவர்கள்தான் கொல்லப்பட்டனர் என்பதை பிறகுதான் அறிந்தோம் என அவன் சொல்லிக் கொண்டிருந்தான். விஞ்ஞானபீடத்தை சேர்ந்த சின்னையா சிவசங்கரும் தொழில் நுட்பக் கல்லூரியைச் சேர்நத கிருஷ்ணமுர்த்தி பிரதீபனும் இப்படி சுட்டுப் படு கொலை செய்யப்பட்டார்கள்.

விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு அறைக்கு வந்தோம். தேவையான கொஞ்ச உடுப்புக்களை எடுத்துக் கொண்டு ஏனைய உடுப்புக்களை கட்டி வைத்து விட்டு விரைவாக விடுதிக்கு திரும்பினோம். விடுதி ஒரு அகதிமுகாம் போலத்தானிருந்தது. அங்கு இரவில் கால்வாசி பேணி கஞ்சிதான் உணவாக பகிரப்பட்டது. மாணவர்கள் யுத்த காலத்தின் அகதிகளாகி உணவுத் தட்டுக்களுடனும் தேனீர் கோப்பைகளுடனும் வரிசையில் நின்றார்கள். உணவுத் தட்டுக்களும் தேனீர் போப்பைகளும் இல்லாமலும் இன்னும் பல மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் நாங்களும் இணைந்து கொண்டோம். சிலவேளை இரவு உணவு சாப்பிட முடியத நிலை ஏற்பட்டது. அறையில வெளியில் தங்கியிருந்த முழு மாணவர்களும் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். கிட்டத்தட்ட 600 மாணவர்கள் வரை ஆண்கள் விடுதியில் தங்கியிருக்க பெண்கள் விடுதியில் அதற்கும் கூடுதலான மாணவிகள் தங்கியிருந்தார்கள். எந்த வசதிகளும் இல்லாத கொடுமையான முகாம் எல்லது சிறைச்சாலையாக அந்த விடுதிகள் மாறிப் போனது. அது ஒரு மாபெரும் சிறைச்சாலை என்பதை நாங்கள் விடுதிக்கு வந்த மறுநாள் ஏற்பட்ட பயங்கரமான நிகழ்வின் பொழுதுதான் அறிய முடிந்தது.

அன்று காலையும் கால்வாசிப் பேணிக் கஞ்சியை குடித்து விட்டு விடுதிக்குள் அடங்கியிருந்தோம். மாணவர்களது கொலையின் பின்னர் மாணவர்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று விடுதி காப்பாளர் சொல்லியிருந்தார். அதனால் அறைக்குள் இருந்து கொண்டிருக்கும் பொழுது வெளியாக தெருவில் நடமாடிக் கொண்டிருந்த இராணுவத்தினர் விடுதிக்குள் திடீரென நுழைந்தார்கள். நான் ஜன்னலால் பார்க்கிறேன் எனது அறையை தாண்டிக் கொண்டு படையினர் நிரை நிரையாக விடுதிக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். விடுதியின் அறைகளுக்குள் நுழைந்து தங்கள் சோதனை நடவடிக்கைகளை தொடங்கினார்கள். புத்தகங்கள் அடுக்கப்பட் அலுமாரிகளை திறந்து அவற்றை வெளியில் எடுத்துப் போட்டு பார்த்தார்கள். கட்டிலை திருப்பிப் பார்த்தார்கள். கதவை தட்டிப் பார்த்தார்கள். உடுப்புக்களை கிளறி எறிந்து பார்க்கிறார்கள். அறைகளுக்கு மேலால் திரிந்து பெரிய ‘டோச் லைட்டுக்களை’ அடித்தபடி பார்த்து ஏறி இறங்கினார்கள். யாரும் எதுவும் பேசவில்லை. யாரும் யாருடனும் பேச முடியவில்லை. ஒவ்வொருவரும் நின்ற நின்ற இடங்களிலேயே படைகளின் கண்காணிப்பில் சிறைப்பட்டோம். எல்லோரது முகங்களும் இறுகிப் போய்விட்டன. கீழ் அறையில் இருந்து அடுத்த கட்டிடத்தில் உள்ள மேல் மாடியில் உள்ள பொது அறைக்கு சீலனும் சூரியும் சென்றிருந்தார்கள். என்னை கைகளை உயர்த்தும்படி கூறிவிட்டு உடல் சோதனை இட்டார்கள். பின்னர் பல்கலைக்கழக அடையாள அட்டையையும் ஆள் அடையாள அட்டையையும் கொண்டு மாணவர் பொது அறைக்கு செல்லும்படி கட்டளையிட்டார்கள்.

நாங்கள் வரிசையாக குற்றவாளிகளைப் போல கைதிகளைப்போல செல்லுகிறோம். பொது அறைக்கு எல்லா மாணவர்களும் வரிசையாக அழைத்துக் கொண்டு வரப்பட்டு இருத்தப்பட்டிருக்கிறார்கள். கைதிகளைப் போல குற்றம் இழைத்தவர்களைப்போல வேற்று நாட்டவர்களாக எங்களை படையினர் நடத்தத் தொடங்கினார்கள். கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள், எழுச்சிகள் எல்லாவற்றுக்காகவும் பழி வாங்கும் நோக்கில் படையினர் அவ மரியாதை செய்யும் விதமாக நடந்ததுடன் மாணவர்களை இணங்காணவும் தேடவும் தொடங்கினார்கள். மாணவர்கள் அனைவரும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டனர். பெயர், முகவரி சொல்லப்பட்டு வீடியோவில் பதிவு செய்யப்பட்டார்கள். தனித்தனியாக விசாரணை செய்யப்பட்டு பொதுவாக ஒரு இடத்தில் இருத்தப்பட்டார்கள். எமது மாணவர்கள் குரலற்று அடங்கிப் போயிருந்தார்கள். அங்கு யாழ் மாவட்ட சிவில் அதிகாரி வந்தார். எங்களை இப்பொழுதுக்கு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியில் அனுப்ப முடியாது என்று சொன்னார். மாணவர்கள் அனைவரும் ஒருமிதத் குரலில் எங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி விடுங்கள் என்று கேட்டார்கள்.

பொங்குதமிழ் நடத்தியது பற்றியும் படைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை பற்றியும் அரசுக்கு எதிராக விடுதலைப் புலிகளுடன் செயற்படுவது பற்றியும் படையினர் ஞாபகப்படுத்தினார்கள். பல மாணவர்கள் அவைகளுக்காக தனியான அறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். மிரட்டங்கள், அச்சுறுத்தல்கள், அத்துமீறல்கள் நடந்த அந்த சோதனை நடவடிக்கையின் பொழுது மிகப் பெரும் சத்தம் இடுகிற முகங்களுக்கு கறுப்பு முகமூடிகளை அணிந்திருப்பவர்களால் ஓட்டப்படும் ‘பீல்பைக்’ எனப்படும் அதிவேக இராணுவ மோட்டார் சைக்கிள்கள் விடுதிக்குள் எங்களைச் சுற்றி உறுமியபடி அலைந்து கொண்டிருந்தன. மாணவர்கள் எல்லாவற்றையும் பெரு அச்சங்களுடன் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். அன்றைய நாள் முழுக்க நாங்கள் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் தீவிர கண்காணிப்பில் அவர்களது கடுமையான சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தோம். யாரும் எதையும் சக மாணவர்களுடன் பேசாது மீள அறைகளுக்குச் சென்றோம். யாருக்கு என்ன நடந்தது என்பதை யாரும் இறுதிவரை பகிரவில்லை.

பசியும் இருளும் எவ்வளவு கொடுமையானது என்பதை இந்த நாட்களில் மேலும் அனுபவிக்க நேர்ந்தது. இரவானால் இருள் குவிந்து விடும். பகல்களில் வெளியில் செல்ல முடியாது. தண்ணீர் வருவதற்கு மின்சாரம் இல்லை. இருக்கும் ஒரு குழாய்க் கிணற்றில்தான் அத்தனை மாணவர்களும் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் எடுக்க வேண்டும். சாப்பாடு இல்லாமல் பசி தொடருகிறது. சில நாட்களில் அருசி காய்கறிகளை போட்டு சோறு சமைப்பார்கள். சில வேளைகளில் அதுவும் இல்லாமல் பசியுடன் இருப்போம். தெருக்கள் பேரச்சத்துடன் விரிகின்றன. அப்பொழுது முழுக்க முழுக்க வசதிகள் அற்ற நிலையில் அச்சத்தின் அச்சுறுத்தலின் பேராபத்தான நிலமையில் இங்கும் மனிதர்கள் வாழ்ந்தார்கள். அன்றைய யாழ் நகரத்தை சாம்பல் நகரம் என்று நண்பன் ஹரிகரசர்மா எழுதியிருந்தான். மரணம் பரவிக்கிடக்கும் வீதிகள் என்று எழுதியிருந்தான். அறியப்படாத கொலைகளை துப்பாக்கிதாரிகள் நிகழ்த்திக் கொண்டேயிருந்தார்கள். சந்தைக்கு சென்றவர், வேலைக்கு அலுவலகம் நோக்கிச் சென்றவர் தலையால் குருதி கசிந்தபடி கொல்லப்பட்டுக் கிடந்தார். ஒவ்வொரு நாளும் எட்டுப்பேர், பத்துப் பேர் என கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாணம் ஒரு கொலை செய்யப்பட்ட நகரமாகிப் போய்விட தெருக்களில் பிணங்கள்தான் வீசப்பட்டுக் கிடந்தன. இராணுவ ஆட்சிக்குள் அறியப்படாத கொலைகளால் யாழ் மக்கள் எல்லோருமே பீதியில் இருந்தார்கள். ஏன் கொலை செய்யப்படுகிறோம்? யாரால் கொலை செய்யப்படுகிறோம்? ஏதற்காக கொலை செய்யப்படுகிறோம் என்று தெரியாமலும் பலர் கொலை செய்யப்பட்டார்கள். நிச்சயமற்ற மரணமும் குருதியும் நிறைந்த வாழ்வை அப்படி உலகத்தில் எந்த மக்களும் எதிர் கொண்டிருக்க மாட்டார்கள். வீதியால் செல்லும் பொழுது எந்த நேரத்திலும் மரணம் நிகழலாம் என்ற ஆபத்தும் தவிர்க்க முடியாததுமான நிலலையைத்தான் யாழ் மக்கள் அனுபவித்தார்கள். சவப்பெட்டிக்குள் கிடந்து கொண்டு பயணம் செய்யும் ஒரு நிலையைத்தான் சனங்கள் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் தாள்களின் தட்டுப்பாட்டால் பத்திரிகைகள் தடைபடத் தொடங்கின. ஆனாலும் ஒற்றைத் தாளுடன் இரண்டு பக்கங்களுடன் பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. அச்சுறுத்தல் ஆபத்து என்ற சூழ்நிலைகளிலும் யாழ்ப்பாணத்தில் உதயன், வலம்புரி, தினக்குரல் என்ற பத்திரிகைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. குறிப்பிட்ட இந்த நேரங்களுக்குள் நகர்ந்த யாழ்ப்பாண வாழ்வில் மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்தது. இரண்டு மணித்தியாலம், மூன்று மணித்தியாலம் என்று பின்னர் காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

சூரியும் சீலனும் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்று எனக்கு சொல்லியிருந்தார்கள். உள்ளே அடங்கி இருக்க மிக கஷ்டமாக இருந்தது. பசியும் வயிற்றை கிள்ளியது. யாழ் நகரத்தில் கொத்து ரொட்டிக் கடை ஒன்று திறந்திருபப்தாக யாரோ சொன்ன ஞாபகம் வந்தது. சைக்கிளை எடுத்துக்கொண்டு யாழ் நகரத்திற்கு புறப்பட்டேன். வழியில் சிவராசா, இளஞ்சிங்கம் என்ற என்னுடன் படிக்கும் இரண்டு மாணவர்கள் யாழ் நகரம் பதற்றமாக இருக்கிறது எங்கே போகிறாய் விரைவாக வந்து விடு என்று சொல்லிக் கொண்டு சென்றார்கள். சரி எனத் தலையாட்டிக் கொண்டு பயத்துடன் சுற்றி வர அடிக்கடி பார்த்துக் கொண்டு நகரத்தை நேர்ககிச் சென்றேன்.

அப்பொழுது, நேரம் மூன்று மணியாகியிருந்தது. நகரத்தில் யாரும் இல்லை. அது வெளித்து மயான அமைதியுடன் இருந்தது. எப்படி இருந்த யாழ் நகரம் இன்று அதன் மக்கள் வருவதற்கு அஞ்சியுள்ளபடி பயன்பாடற்று மூடப்பட்டிருக்கிறது. அங்காங்கே சில கடைகள் கொஞ்சப் பொருட்களுடன் திறந்திருக்கின்றன. அதையும் மூடிவிட்டு வீடுகளுக்கு திரும்ப அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். நான் அந்தக் கொத்துரொட்டிக் கடையடிக்கு சென்றேன். கறுப்புத் துணிகளால் வாயினை மூடிக் கட்டிய படையினர் நகரத்தின் தெருவெங்கும் குவிந்து நிற்கின்றனர். யாருடைய முகங்களையும் தெருவையும் பார்க்காமல் கடைக்குள் நுழைந்தேன். ஒரு கிண்ணம் கொத்துக்கு சொல்லி விட்டு கதிரையில் அமர்ந்திருந்தேன். மெல்ல வீதியின் பக்கமாக முகத்தை திருப்பிய பொழுது யாரே சுட்டுக் கொல்லப்பட்டு தெருவில் கிடக்க வெள்ளைத் துணியால்; மூடப்பட்டிருந்தது. படைகள் அந்தப் பிணத்தை சுற்றி காவல் காத்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.


Wednesday, March 17, 2010

துப்பாக்கிகள் அலையும் இடிபாடடைந்த நகரம்

போரும் வாழ்வும் 06

ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிக்கிறது.



பகல் அழிந்துவிட துப்பாக்கி தேடியலையும் இரவு முழுமையாக விரிந்து போயிருந்தது. இராணுவத்தால் மூடுண்ட நகரத்தில் வாழ்ந்து கொண்டு நண்பர்களின் தோழ்களில் பதுங்கியிருந்து அறைக்குள் அடங்கிய நாட்களும் கொடிய யுத்த களம் ஒன்றில் விட்டு வந்த அம்மாவும் தங்கச்சியும் அவர்களை சுற்றி விழும் மரணங்களும் என்னைச் சுற்றி நிகழும் மரணங்களும் எப்பொழுதும் என் கனவுகளைச் சிதைத்தபடி குறி பார்த்திருக்கும் துப்பாக்கியின் சொற்களும் என்று, என் வாழ்வு அச்சம் தரும் காலத்தால் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

துப்பாக்கிகள் அலையும் இடிபாடடைந்த நகரம்

இராணுவத்தின் படையெடுப்புகளுக்கு அஞ்சி ஓடிக்கொண்டிருந்த நான் முதல் முதலில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருந்தேன். முகமாலையில் இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையிலான சோதனைச் சாவடி அமைந்திருந்தது. வடக்கு யுத்த எல்லையிருந்த முகமாலையிலிருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் சிறியதொரு நகரமாயிருந்த பளையில் மக்கள் செறிவாக வாழ்ந்தார்கள். அபாயம் சூழ்ந்திருந்த நகரமாகவே பளை எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கிறது. பளையில் தனியாரின் கடைகள் அரச மற்றும் விடுதலைப் புலிகளின் வங்கிகள், அலுவலகங்கள் என்பன கட்டப்பட்டிருந்தன. எப்பொழுதும் கலகலப்பான நகரமாயிருந்தது. யுத்தத்தால் எப்பொழுதும் காயமடைந்த கட்டிடங்கள் எங்கும் நின்று கொண்டிருந்தன. முகமாலை நிலம் யுத்தத்தின் பெருங் காயத்திற்குள்ளாயிருந்தது. பனைமரங்கள் எல்லாமே தலையிழந்து நின்று கொண்டிருந்தன. சிதைந்து போன அந்த நிலம் போராளிகளது குருதியாலும் இராணுவத்தினரது பலியாலும் இரண்டு தரப்புகளாலும் தொடர்ந்து ஆளப்பட்டுக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாணத்தின் கதைகளை அதுநாள் வரை கேட்டுக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆவலாயிருந்தது. அது கொண்டிருந்த வரலாற்றின் காயங்களும் துயர்களும் நினைவுக்கு வந்து கொண்டிருந்தன. மனித குலம் எதிர்கொண்டிராத துயரங்களை யாழ்ப்பாணமும் அதன் மக்களும் எதிர்கொண்டிருந்தார்கள். ஈழ மக்களின் புரதானமான - பூர்வீகமான நகரமாயும் - வாழ் நிலமாயும் யாழ்ப்பாணம் திகழ்ந்திருக்கிறது. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர்கள், பிரித்தானியர்கள் போன்ற அந்நியர்கள் யாழ்ப்பாணத்தை ஒரு காலகட்டத்தில் ஆக்கிரமித்து கோட்டைகளையும் நகரங்களையும் தெருக்களையும் நிறுவி ஆண்டார்கள். யாழ்பாணத்து மக்கள் போரையும் இடப்பெயர்வுகளையும் ஆக்கிரமிப்புக்களையும் அழிவுகளையும் கொண்ட துயர் மிகுந்த காலத்தையே வரலாறாக கொண்டிருக்கிறார்கள். இலங்கை - ஈழத்திலிருந்து அந்நியர்கள் வெளியேறுவதற்கு முன்பாக அந்நியர்களது படையெடுப்புக்கள் பெரும் வரலாற்று துயர்களையும் காயங்களையும் எற்படுத்தியிருந்தன. வெள்ளைக்காரர்கள் வெளியேறிய பொழுது இலங்கை 1948இல் சுகந்திரம் அடைந்ததாக சொல்லப்பட்ட காலத்திலிருந்து உள்நாட்டு முரண்பாடுகளும் வாழக்கைப் போராட்டமும் தொடங்கிவிட்டது.

ஈழப்போராட்டம் தொடங்கியிருந்த பொழுது எண்பதுகளில் பல எழுச்சிகள் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருந்தன. ஈழப்போராட்ட எழுச்சியின் களமாகவும் இயக்கமாகவும் யாழ்ப்பாணம் இருந்திருக்கிறது. பல உன்னதமான பேராளிகள் யாழ்ப்பாணத்திலிருந்து உருவாகியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் வாழ்வையும் அடையாளத்தையும் பிரதிபலிப்பதில் யாழ்ப்பாணக் குடாநாடும் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. கல்வி, பண்பாடு, கலைகள், வாழ்வு முறைகள் என்பவற்றின் பொக்கிஷமாக மக்களால் என்றும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. உழைப்பு, நம்பிக்கை, எழுச்சி என்பவற்றை யாழ்ப்பாணத்து மக்கள் தங்கள் ஆதாரமாக கொண்டிருந்தார்கள். ஈழப்பேராட்டம் தொடங்கிய பொழுது அதற்குப் பிறகு யாழ்ப்பாணம் அச்சம் தருகிற நாட்களையே வாழ்வையே எதிர்கொண்டது. யாழ்ப்பாணத்து மக்கள் மரணத்திற்குள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட துயரங்களுக்கு எதிராக போராளி இயக்கங்கள் எழுச்சிகொண்டன.

1948 இல் கிடைத்த சுகந்திரத்திற்குப் பிற்பட்ட அரசுகளின் வழி வந்த அப்போதைய அரசுகளும் படைகளும் உரிமைகளை மறுத்து தமிழ் மக்களை அழிக்கவும் இருப்பைச் சிதைக்கவும் பேராட்டங்களையும் குரல்களையும் முறியடிக்கவும் மிகுந்த தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இராணுவ ரீதியாக தமிழ் மக்களை ஒடுக்கத் தொடங்கின. இதற்காக மக்களுக்காக ஒரே அணியில் நின்ற இயக்கங்கள் உலகத்தின் முக்கியமாக இந்தியாவின் சதியால் பிரிந்து சிதறுண்டுபோனது. படைகளினால் எதிர்கொண்ட துன்பங்களுடன் போராளி அணிகளின் சிதைவால் - முரண்பாடுகளால் - ஏற்பட்ட விளைவுகள் அளித்த துன்பங்களையும் மக்கள் முகம் கொடுக்க நேர்ந்தது. இந்திய இராணுவ வருகையின் பொழுது பல மக்கள் பல இடங்களில் படுகொலை செய்யப்பட்டார்கள். யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் நெஞ்சை உலுக்கும் கோரப்படுகொலை ஒன்றை இந்தியப் படைகள் நடத்தின. வைத்தியர்கள், தாதியர்கள், நோயாளர்கள் என்று வைத்தியசாலைக்குள் புகுந்து இந்தியப் படைகள் படுகொலையை நிகழ்த்தியது. ஈழமெங்கும் இந்தியப் படைகள் பேரழிவுகளையும் அச்சமான வாழ்வையும் ஏற்படுத்தியபொழுது யாழ்ப்பாணமும் அதிகளவு பாதித்திருந்தது.

ஈழப் பேராட்டம் என்பது பேதங்களற்ற பல்வேறு பேராளிகளால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அனைத்து இயக்கங்களும் மக்களுக்காக துப்பாக்கிகளை ஏந்தினார்கள். சிங்கள அரசை புறக்கணித்து சோசலீச சமத்துவம் கொண்ட ஈழத்தை அமைப்போம் என்று தொடங்கிய இயக்கங்கள் பின்னர் ஏற்பட்ட உள் முரண்பாடுகளால் தமக்குள் தாமே யுத்தம் செய்தன. இயக்கங்கள் ஒன்றை ஒன்று அழித்தன. போராளிகளை போராளிகள் படுகொலை செய்தார்கள். ஈழப் பேராட்டத்தில் எல்லா இயக்கங்களினதும் பங்கு இருக்கிறது. எனினும் விடுதலைப் புலிகளது கைகள் பின்னர் ஓங்கியிருந்தன.  இந்த உள் முரண்பாடுகளில் அநேகம் கதைகள் அறியப்டாதவையாகப் போயிருக்க, பல்வேறு வாக்குமூலங்களையும் குருதி படிந்த நினைவுகளையும் கொண்டதாக இன்றும் இருக்கிறது. 90களில் ஈழத்தில் புலிகளின் பலம் ஓங்கியிருந்தது.  மற்ற இயக்கங்கள் காப்பாற்றிக் கொள்ள  இலங்கை அரசாங்கத்திடம் இணைந்து கொண்டன. அரசாங்கத்துடன் இணைந்த இயக்கங்கள் அநேகளவான மக்களால் வெறுக்கப்பட்ட போதும் சில மக்களிடம் மாற்று இயக்கங்கள் செல்வாக்கைப் பெற்றுக் கொண்டுதானிருந்தன. இந்த முரண்பாடுகளும் ஈழ மக்களின் வாழ்வும் பேராட்டமும் ஏற்படுத்திய துயரங்களில் யாழ்ப்பாணம் பல அழிவுகளைச் சந்தித்திருந்தது. 1990 இல் தொடங்கிய தீவக இடப்பெயர்வு அந்த மக்களை அந்தரத்துடன் வழிகளற்று அலைய வைத்தது. கடலில் கைவிடப்பட்ட அந்த மக்கள் தத்தழித்தார்கள். படகுகளில் அராலி ஊடாக பேரவலத்துடன் யாழ் நகரத்தை வந்து சேர்ந்தார்கள்.

யாழ்ப்பாணத்தின் முக்கியமான நகரங்கள் இடங்கள் என்பன விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. காங்கேசன்துறை துறைமுகம், பருத்தித்துறை துறைமுகம், பலாலி விமானத்தளம் என்பன இராணுவத் தளங்களாக இருந்தன. முழு ஈழப்போராட்ட அணிகளும் எதிர்கொண்ட இராணுவத் தளங்களை பின்னர் விடுதலைப்புலிகள் எதிர்கொண்டார்கள். 1994 இல் சந்திரிக்கா அரசாங்கம் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியைக் கொடுக்க 1995 இல் மீண்டும் போர் வெடித்தது. சந்திரிக்கா அரசு யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்ற தாக்குதல்களைத் தொடங்கிய பொழுது யாழ்ப்பாணத்து மக்கள் பெருந் துயரங்களை அனுபவித்தார்கள். உலகத்தின் மக்களை உலுக்கும் கொலைகள் நடந்தேறின. ‘நவாலிப்படுகெலை’ என்ற நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவிச் சனங்கள்மீதான விமானத்தாக்குதலில் 160 இற்கு மேற்பட்ட சனங்கள் மிகக்கோரமாக பலியாகினார்கள். ‘நந்தாவில் அம்மன்கோயில் படுகொலை’ என்ற கொக்குவிலுள்ள நந்தாவில் அம்மன் கோயிலில் தஞ்சடைந்திருந்த மக்கள்மீதான விமானத்தாக்குதலிலும் அப்பாவிகள் மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டார்கள். ‘நாகர் கோவில் படுகொலை’ என்ற நாகர்கோவில் மத்திய பாடசாலை மீது 1995 செப்டம்பர் 22ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 25 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலியாகியிருந்தார்கள். இப்படி மக்களின் குடிமனைகள், மக்கள் அலுவலகங்கள், நகரங்கள், வீதிகள் என்று எல்லாவற்றையும் இலக்கு வைத்து சந்திரிக்கா அரச படைகள் நடத்திய விமானத் தாக்குதல்கள் ஷெல் தாக்குதல்களில் யாழ்ப்பாணமே குருதி படிந்த நகரமாகவும் நிலமாகவும் குடாவாகவும் காணப்பட்டது.

இந்த மரண ஏக்கம் சுமந்த வாழ்வில் மனித இனம் எதிர்கொள்ள முடியாத இடப்பெயர்வு ஏற்பட்டது. 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி இராணுவம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கப் போகிறது என்று விடுதலைப் புலிகள் ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். வலிகாமம் பிரிவிலிருந்து தென்மராட்சி வடமராட்சிப் பிரிவுகளுக்கு 5 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அன்றிரவு நடக்கத் தொடங்கியவர்கள் கால் வைக்க முடியாத சன நெருக்கடியாலும் சனங்களை அடக்கிக் கொள்ள முடியாத வீதிகளும் பேரவலத்திற்கு உள்ளாகியது. கைதடிப் பாலத்தை கடந்தபொழுது கடல்நீரேரியில் மக்கள் அவற்றுக்குள் தாழந்தும் மிதந்தும் பெருமழையில் நனைந்தும் பெருந்துயரத்தை அனுபவித்தார்கள். முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று எல்லோருமே கால் எடுத்து வைக்க முடியாமலும் கடந்து விட முடியாமலும் தவித்தார்கள். வரும் வழியில் பலர் தொலைந்து போனார்கள். முதியவர்கள் கைவிடப்பட்டார்கள். பலர் இறந்து போனார்கள். ‘சூரியக்கதிர்’ எனப் பெயரிடப்பட்ட நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை மக்களை பிரித்து வன்னிப் பெருநிலத்திற்கும் வடமராட்சிக்கும் என்று பிரித்து கெண்டு சென்றது. விடுதலைப்புலிகள் கணிசமான மக்களை தம்முடன் வன்னிக்கு நகர்த்தினார்கள். சில மக்கள், இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். வன்னியிலிருந்தும் படகுகளில் மக்கள் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் இராணுவம் ஏற்படுத்திய படுகொலைகள் அச்சமான வாழ்க்கை என்பன மக்களை திகிலடையச் செய்திருந்தன. இளைஞர்கள் காணாமல் போய்க் கொண்டிருந்தார்கள். இளைய சமுதாயத்தை அழித்து சமுகத்தில் சோம்பலை ஏற்படுத்த இராணுவம் செயற்பட்டுக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் கொலை நகரமாக மாறிக் கொண்டிருந்தது. இரகசியமாக அறியப்படாத வகையில் இளைஞர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு புதைக்கப்பட்டார்கள். இப்படி துயர் படிந்த வரலாற்றைக் கண்ட யாழ்ப்பாணத்தை பார்த்துக் கொண்டு வந்தேன்.

ஏ-9 வீதியில் கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பொழுது எங்கும் பாரிய இராணுவ முகாங்களும் காவலரண்களும் என்று யாழ்ப்பாணம் இராணுவ மயமாகிக்கிடந்தது. நான் பயணித்த பேருந்தில் பெண் போராளிகள் மற்றும் ஆண் பேராளிகள் இருந்தார்கள். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போராளிகள் யாழ்ப்பாணத்தில் எல்லா இடங்களுக்கும் சென்று கொண்டிருந்தார்கள். சாவகச்சேரி, நாவற்குழி;; கைதடி என்று வரும் இடங்கள் எல்லாவற்றிலும் அழிந்த காயமடைந்த கட்டிடங்கள் நின்று கொண்டிருந்தன. சனங்களின் வீடுகள் காயப்பட்டிருந்தன. பெரும்பாலான வீடுகளில் இராணுவம் குடியிருந்தது. பல வீடுகள் மக்களின்றி வெறுமையாயிருந்தது. யாழ் நகரத்திற்கு வந்திறங்கினேன். யாழ் நரத்தின் பின் புறமாக நின்ற கட்டிடங்கள் யுத்தத்தின் பெருங்காயங்களையும் சிதைவுகளையும் வரலாற்றின் இடிபாடுகளையும் சனங்களின் சோகத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்து மக்களின் யுத்தத்தில் அடிபட்டுப்போன வாழ்க்கைத் துயரை வெளிப்படுத்திக் கொண்டு நின்றது. 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தில் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம் வெள்ளை அடிக்கப்பட்டு காயம் மறைக்கப்பட்டிருந்தது. யாழ் நகரத்தில் ஈழப்பேராட்ட மாற்று அரசியல் அணிகளின் அலுவலகங்கள் இருந்தன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர முண்ணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் போன்ற அணிகளின் அலுவலகங்கள் இராணுவப் பாதுகாப்புடன் அமைந்திருந்தன.

பல்கலைக்கழக வாழ்வு என்னை கனவுகளுடன் அழைத்துச் சென்றது. நான் புதிய சூழலில் வாழவும் புதிய அனுபவங்களை பெறவும் இடமளித்தது. இராணுவத்தின் முற்றுகையுள் எந்நேரமும் இருந்த பல்கலைக்கழகத்தில் நான் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் திணிக்கப்பட்டன. அபாயமான வலைக்குள் வந்தது போன்ற பீதி ஏற்பட்டது. எனது அணியில் 500 க்கு மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தார்கள். திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், கண்டி போன்ற பிற மாவட்டங்களிலிருந்து தமிழ் முஸ்லீம் மாணவர்கள் வந்திருந்தார்கள். அந்த நாட்களில்தான் நான் கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்தேன். பதின் மூன்று வயதில் எட்டாம் வகுப்பிலிருந்தே அன்றாடம் எதிர் கொள்கின்ற விடயங்களை கவிதைகளைப்போலவும் நாட்குறிப்புகள்போலவும் எழுதி வைத்திருந்தேன். பல்கலைக்கழகம் வந்தவுடன் வாசிப்புப் பழக்கம் விரிந்தது. எதையும் எழுத முடியாத அது பற்றி யோசிக்க முடியாத போர்ச் சூழலில் வாழ்ந்து கொண்டிந்த நினைவுகள் எப்பொழுதும் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்தின் வாழ்வு அன்றாட நிகழ்வுகள் என்பன என் கவிதைகளில் பாதிப்பை ஏற்படுத்தின. முதலில் எதையோ எழுதிய பொழுதும் யாழ்;பாணத்தில் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த துப்பாக்கிகளுக்குள்ளான வாழ்வு அதை எழுத வேண்டும் என்று நிர்ப்பந்தித்தது.

அப்பொழுது சமாதான காலம். ஆனால் சமாதானம் தொடங்கி 3 வருடங்கள் கழிந்துபோயிருந்த நிலையில் எந்தத் தீர்வுகளும் எட்டப்படவில்லை. சமாதானம் எப்பொழுதும் வெடிக்கத் தயாராக இருக்கும் குண்டைப்போல எல்லோருக்கும் மேலே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் அனைவரும் வன்முறைகளில் இறங்கத் தொடங்கினார்கள்.  விடுதலைப் புலி ஆதரவாளர்களையும் ஈழப் பேராட்ட எழுச்சியை முன்னெடுத்தவர்களையும் இராணுவம் படுகொலை செய்து கொண்டிருந்தது. இந்தப் படு கொலைக் கலாசாரம் இறுதியில் எல்லா மக்களையும் அஞ்சும் ஒரு வாழ்க்கைக்கு கொண்டு வந்தது. மக்கள் எல்லோருடைய துப்பாக்கிகளுக்கும் அஞ்சினார்கள். விடுதலைப்புலிகள் இராணுவத்தின் வாகன அணிகளை ரோந்துகளை இலக்கு வைத்து கிளைமோர்த்தாக்குதல்களை நடத்தினார்கள்.  இதற்குப் பதிலாக வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இராணுவம் ஊடுருவி பல கிளைமோர் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தது. இதில் மக்கள் பெருமளவில் பலியாகினார்கள்.

இப்படியான சூழலில் செப்டம்பர் 30 2005 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ‘பொங்குதமிழ் எழுச்சி 2005’ நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால் மக்களின் விடுதலை உணர்வு நிரம்பிய எழுச்சியாக ஜனநாயகப் பேராட்டமாக ‘பொங்குதமிழ்’ உருவாக்கம் பெற்றது. இந்த பேராட்டத்தை மக்கள் கோரிக்கையை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த செம்மையுடன் நடத்தினார்கள். 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி முதலாவது பொங்குதமிழ் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்றது. இராணுவத்தின் கடுமையான முற்றுகைக்குள் அச்சுறுத்தலுக்குள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அந்தப் பொங்குதமிழ் நிகழ்வை நடத்தி முடித்தார்கள். பல்கலைக் கழகத்தை இராணுவம் சுற்றி வளைத்து முற்றுகையிட்ட பொழுதும் மக்கள் அனைவரும் வளாகத்திற்குள் நுழைந்தார்கள். வேலிகளாலும் மதிலாலும் ஏறி வளாகத்திற்குள் நுழைந்தார்கள். ஏதோ ஒரு வழியால் பெருமளவு மக்கள் வந்து சேர்ந்தார்கள். எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் விதமாக முதலாவது பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்றது. எழுச்சி பூர்வமான உணர்வு நிரம்பிய கலையின் ஊடாக மக்களின் அபிலாசைகளை உலகத்திற்கு பொங்குதமிழ் என்ற எழுச்சி எடுத்துக் கூறியது. முழு மக்களுக்கும் முழு ஈழத்திற்குமான விரிந்த ஆழமான எண்ணம் பொங்குதமிழில் இருந்தது.

நான் பொங்கு தமிழ் பிரசாரங்களுக்கு சென்றேன். வீடு வீடாக சென்று மக்களிடம் பொங்கு தமிழ் நிகழ்வு பற்றிய விளக்கங்களையும் சொல்லி அவர்களை அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டபொழுது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு தாங்கள் அவசியம் கலந்து கொள்வோம் என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை பொங்கு தமிழ் பிரசாரம் நடைபெற்றது. 30ம்திகதி குறிப்பிட்டபடி பொங்குதமிழ் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். மக்கள் தங்கள் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் கடுமையாக வெளிப்படுத்தினார்கள். யுத்தத்தை விரும்பாத மக்கள் இந்த ஜனநாயகப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக முன்னெடுத்தார்கள். அன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக சூழலில் கடுமையான சன நெருக்கடி காணப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் உயிரை மக்களுக்காக முன்வைத்து பொங்கு தமிழை நடத்தினார்கள். பொங்கு தமிழில் விடுதலைப் புலிகள் ஏக பிரதிநிதிகள் என்றும் தலைவர் பிரபாகரன் தேசியத் தலைவர் என்றும் கோஷங்கள் முன் வைக்கப்பட்டன. பொங்குதமிழ் நிகழ்வு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டது என்ற கருத்தால் சில மாற்று இயக்கங்கள் பொங்குதமிழை எதிர்த்தன.

பல்கலைக் கழகத்திலிருந்து கிளிநொச்சிக்கு இடையிடையே விடுமுறைக்கு சென்று வந்து கொண்டிருந்தேன். அங்கு பதற்றமற்ற இயல்பான வாழ்வு நடந்து கொண்டிருந்தது. கிளிநொச்சிக்கு போவதும் அங்கு இருப்பதுமே பாதுகாப்பானதாக இருந்தது. இராணுவமயமான வாழ்விலிருந்து வன்னிக்கு சென்றதும் சுகந்திரமான வாழ்வும் சூழலும் இருப்பதையே உணர முடிந்தது. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி நான் எங்கள் மாணவர்களுடன் இராணுவத்தின் கொடுமையான தாக்குதலுக்குள் சிக்கினேன். அன்றைய தினம் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளைக் நிறுத்தக் கோரி போர் நிறுத்த கண்காணிப்பகத்திற்கு கோரிக்கை ஒன்றை கொண்டு சென்றபடி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கிய சமூகம் மாபெரும் பேரணியில் ஈடுபட்டது. யாழ் பல்கலைக் கழகத்திலிருந்து மாணவர்கள், துனைவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் சென்று கொண்டிருந்தார்கள். மாணவர்களின் அணியில் நானும் அடங்கியிருந்தேன். எங்களின் முன்னால் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றார்கள். பல்கலைக் கழகத்திலிருந்து சென்று பரமேஸ்வராச் சந்தியை அடைந்த பொழுது எங்களை இராணுவம் திரும்பிப்போகச் சொன்னது. திரும்பாமல் நாங்கள் தொடர்ந்து சென்றபொழுது எங்களை நோக்கியும் வானத்தை நோக்கியும் நிலத்தை நோக்கியும் படைகள் துப்பாக்கிச் சூடுகளை நடத்தின. துப்பாக்கியால் மாணவர்கள் துனைவேந்தர், விரிவுரையாளர்மீது கடுமையாகக் தாக்கியபடி தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டன. எல்லோரும் சிதறி ஓடினார்கள். துப்பாக்கிச் சூடுகள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தன. துரத்திக் கொண்டிருந்தன. மதில்களால் ஏறிக் குதித்து ஓடி ஓடி பல்கலைக் கழகத்திற்கு வந்தோம். அன்றைய நிகழ்வுகளையும் பாதுகாப்பின்மையையும் கருத்தில்கொண்டு பல்கலைக்கழகம் காலவரையற்றபடி மூடப்பட்டது. அன்றே நாங்கள் புறப்பட்டு எங்கள் வீடுகளுக்கு திரும்பியிருந்தோம்.

மறுநாள் 20ஆம் திகதி பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து இராணுவம் அட்டகாசங்களை புரிந்தது. வானை நோக்கி துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதுடன் சில விரிவுரையாளர்களையும் மாணவர்களையும் கைது செய்திருந்தது. பல்கலைக் கழகம்மீது இராணுவம் கடுமையான சீற்றம் கொண்டது. யாழ்குடா நாடு இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் இருந்த பொழுது யாழ் பல்கலைக்கழகம் குறிப்பாக மாணவர்கள் முன் வைத்த கேள்விகள் பொருந்திய எழுச்சி அவர்களுக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுத்திருந்தது. இந்த நெருக்கடிகளுடன் விடுதலைப் புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறி தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றார்கள். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டபோது நிராயுதபாணியாக பேச வந்த இலங்கைக் காவல்துறை அதிகாரி படுகொலை செய்யப்பட்டபோது மேலும் முரண்பாட்டு நிலை தீவிரம் பெற்றது.

பல்கலைக்கழகம் மூடப்பட்டதால் 3 மாதங்கள் வரை வீட்டிலிருக்க வேண்டி வந்தது. அப்பொழுது தமீழத் தேசியத் தொலைக் காட்சியுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. முதலில் என்னை நேர்காணல் செய்வதற்காக அங்கு பணிபுரிந்த அனுஷா என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வந்தார். எனது கவிதைகள் பற்றியும் வறுமையான சூழ்நிலையிலிருந்து பல்கலைக்கழகம் சென்றது பற்றியும் அண்ணாவின் போராட்ட நினைவுகள் பற்றியும் அம்மாவின் தியாகங்கள் பற்றியும் அந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருந்தது. பின்னர் தமீழத் தேசிய தொலைக்காட்சியில் நான் பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது. கல்வி சார்ந்த நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்கும் பணியில் அமர்ந்தேன். அப்பொழுது யுத்த களங்களில் படப்பிடிப்புகளில் ஈடுபட்ட பேராளிகளுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. எனது முதலாவது நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அன்பழகன் என்ற பேராளி பின்னைய நாட்களில் எனக்கு நெருங்கிய தோழனாக மாறியிருந்தான். கல்வி சார்ந்த அந்த நிகழ்ச்சி எமது மாணவர்களின் கல்வி நிலவரங்களையும் நெருக்கடிகளையும் சிறுவர்கள் குழந்தைகளது துயரமான வாழ்வையும் பல இடங்களில் எனக்கு காண்பித்தது. முதன் முதலில் யாழ் பளை மத்திய கல்லூரிக்குச் சென்றிருந்தேன். யுத்தத்தால் சிதைவடைந்த அந்தப் பாடசாலை பற்றிய வரலாறு அதன் சமகால நிலவரங்கள் என்பன அடங்கிய அந்த விவரணச் சித்திரத்தை அனுஷா என்ற என் தோழி ஒருவருடன் இணைந்து தயாரித்தேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மனச் சிதைவுக்குள்ளான சிறுவர்களும் அவர்களது குடும்பப் பின்னணிகளும் மனதை அதிர வைத்தன. மேலும் சில விவரணங்களையும் குறும்படங்களையும் தயாரித்திருந்தேன்.

இந்தப் பணியில் மூன்று மாதங்களை நிறைவு செய்திருந்தபோது மீண்டும் 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவில் பல்கலைக்கழகம் தொடங்கியது. பல்கலைக்கழகத்திற்கு வந்தேன். வளாகம் செழிப்பிழந்து வெறுமையுடன் இருந்தது. முழு யாழ்ப்பாணமும் ஒருவிதமான சோர்வுக்கு உள்ளாகியிருந்தது. மாணவர்கள் பலர் வகுப்புக்கு திரும்பவில்லை. நிறைய மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்திருந்தார்கள். முஸ்லீம் மாணவர்களும் சிங்கள மாணவர்களும் பல்கலைக் கழகத்திற்கு திரும்பி வரவில்லை. எங்கும் அறியாத மரணங்களே நிகழ்ந்து கொண்டிருந்தன. பெரும் அச்சமான சூழல் தொடர்ந்து கொண்டிருந்தது. பேச்சு வார்த்தைகளும் சமாதானங்களும் யுத்தத்தை வளர்க்கிற காலமாகவும் தயார்படுகிற அவகாசமாகவும் இரண்டு தரப்புகளிடமும் நடந்து கொண்டிருந்தது. 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி நnடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை அரசின் ஜனாதிபதியாக மகிந்தராஜபக்ஷ பதவி ஏற்ற நாளிலிருந்து இரண்டு தரப்புகளும் யுத்தத்தை வெளிப்படையாக வரவேற்றபடியிருந்தன. அரசாங்கம் ஏமாற்றினால் யுத்தம் வெடிக்கும் ஈழம் அமையும் என்ற விடுதலைப் புலிகளின் எச்சரிக்கைத்தனமான அறிவிப்புகளும் பயங்கரவாதிகளிடமிருந்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்து யுத்தத்தை தொடங்கி அவர்களை அழியுங்கள் என்ற இனவாதிகளது கோஷசங்களும் அனைத்து இன மக்களையும் பதற்றத்திற்கு உள்ளாக்கின.

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்பிருந்த நிலையிலிருந்து பாரிய வளர்ச்சிகளைப் பெற்றிருந்தார்கள். விமானப்படை, தாக்குதல்கள் அணிகள், யுத்த கள வாகனங்கள், ஊடகங்கள், பயிற்சியளிக்கப்பட்ட போராளிகள் என்று பல வகையில் தங்களை வளர்த்துக் கொண்டார்கள். வன்னியிலும் கிழக்கின் சில பகுதிகளிலும் புலிகளின் பலம் அசைக்க முடியாதபடியிருந்தது. சமாதான காலம் என்பது யுத்தின் ஓய்வுக்காலமாகவும் அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் காலமாகவும் இருந்திருக்கிறது. இரண்டு தரப்புக்களும் சமாதானத்தில் நம்பிக்கை வைக்காமல் யுத்ததின் மூலமே வெல்ல முடியும் - தீர்க்க முடியும் என்று நம்பினார்கள். புலிகளின் கோரிக்கைக்கு இணங்கக்கூடாது என்று அரசும் அரசாங்கம் எங்களை ஏமாற்றுகிறது என்று விடுதலைப் புலிகளும் நினைத்தார்கள். உன்மையில் அப்படியான நிலைப்பாடே இரண்டு தரப்பிடமும் இருந்தது. ஆனால் தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. 2006ஆம் ஆண்டு மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப் புலிகள் மூடிய பொழுது கிழக்கில் யுத்தம் ஒப்பந்தத்தை கிழித்துக்கொண்டு வெடித்தது. சில நாட்கள் இந்த அணைக்கட்டை திறப்பதற்காக மனிதாபிமான படை நடவடிக்கை என்ற பெயரில் நான்காம் கட்ட ஈழப் போரை அரசாங்கம் தொடக்கி வைத்தது. கிழக்கிலிருந்த ஒரு சில பேராளிகளால் விளைவுகள் அறியாமல் மூடப்பட்ட போது மாவிலாறு அணைக்கான யுத்தம் வெடித்தது. இறுதியில் மாவிலாற்றை போர் நடவடிக்கையின் மூலம் இராணுவம் கைப்பற்றிக் கொண்டது.

மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்ற பின்னர் யுத்தம் நடத்த வேண்டும் என்ற வெறியில் இருந்தார். யார் யுத்தத்தை தொடங்குவது எங்கு தொடங்குவது என்ற மர்மம் நீடித்துக் கொண்டிருந்தது. இரண்டு தரப்பும் தங்கள் பலங்களில் கடுமையான நம்பிக்கையுடன் இருந்தன.
விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம்மீது தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்ற ஊகங்கள் வெளி வரத் தொடங்கின. என்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்த சுதர்சன் என்ற தோழன் யாழ்பாணத்திலிருந்து புறப்பட்டு கிளிநொச்சிக்கு வந்தான். அவன் யாழ்ப்பாணத்தில் பலாலிக்கு அருகில் உள்ள புன்னாலைக் கட்டுவன் என்ற இடத்தை சேர்ந்தவன். கிளிநொச்சியில் முறிப்பு என்ற இடத்தில் அவன் தங்கியிருந்த அவனது சகோதரியின் வீட்டுக்கு அன்றிரவு சென்ற வேளை போராளிகள் யாழ்ப்பாணம்மீது தாக்கப் போகிறார்கள் எனவும் தோல்வியடையும் இராணுவம் மக்களையும் குறிப்பாக மாணவர்களை எதுவும் செய்வார்கள் என்பதால் இங்கு வந்திருக்கிறேன் என்றும் என்னை யாழ்ப்பாணம் போக வேண்டாம் என்றும் சொன்னான். என்னுடன் அறையில் தங்கியிருந்த வவுனியாவைச் சேர்ந்த சீலன் என்ற தோழனும் முத்தையன்கட்டு முல்லைத்தீவைச் சேர்ந்த சூரி என்ற தோழனும் எனக்காக காத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். நான் யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு வந்திருந்தேன். நான் வந்ததும் எல்லா மாணவர்களும், போராளிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றப் போகிறார்களாம் என்று செய்திகள் அடிபடுகின்றன உண்மையா என்று கேட்டார்கள். பாதி மாணவர்கள் அந்தச் செய்தி அறிந்த உடனேயே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். யாழ்பபாணம் முழுவதும் இந்தக் கதை பரவியிருக்க வேண்டும்.

ஓகஸ்ட் 11 2006ஆம் ஆண்டு. அன்றைய தினம் மாலை ஐந்தரை மணியிருக்கும் நானும் சீலனும் பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருக்கும் உணவகம் ஒன்றுக்குள் இரவு உணவை வாங்கிக்கொண்டிருந்த பொழுது ஷெல்கள் வந்து விழும் பெரும் சத்தம் கேட்கத் தொடங்கியது.

நன்றி : உயிர்மை மார்ச் 2010

Monday, January 25, 2010

கனவுக்கும் சமாதானத்துக்குமான நகரம்



போரும் வாழ்வும் 05


ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிக்கிறது.

கனவுக்கும் சமாதானத்துக்குமான நகரம்

வெளியில் வந்த போராளி அண்ணாவை புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவ முகாம் ஒன்றுக்கு அனுப்பிவிட்டாத சொல்லிக்கொண்டு வந்தார். அண்ணா நலமாக இருப்பதாகவும் அண்ணாவைப் பார்ப்பதற்கு புதுக்குடியிருப்புக்கு என்னை அடுத்த நாள் அழைத்துச் செல்லுவதாகவும் அங்கு நின்ற மேலும் சில பேராளிகளும் சேர்ந்துகொண்டு சொன்னார்கள். என்னை அழைத்துச் சென்ற போராளிகள் திரும்ப ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றார்கள். அப்பொழுது மாலை நேரமாகியிருந்தது. அம்மா பதறியடித்துக் கொண்டு என்ன நடந்தது என்று கேட்டார். எங்கள் வீட்டில் பதற்றம் அதிகரித்தது. அம்மா அழுது கொண்டேயிருந்தார். பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் எங்கள் வீட்டுக்கு வநது அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அண்ணாவுக்கு எதுவும் நடக்காது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல இரவாகியது.

அம்மாவுக்குத் தெரியாமல் எனது சிறிய வானொலிப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள தெருவுக்கு வந்தேன். ‘புலிகளின் குரல்’ என்ற விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ வானொலியில் ஏழு மணிக்கு இடம்nபுகிற செய்தி முடிவடைந்த பின்னர் களத்தில் வீரச்சாவடைந்தவர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்படும். செய்தியில் எல்லைப்பகுதிகளில் எதிர்பாராமல் நடந்த சமார்கள் பற்றித்தான் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. வீரச்சாவு அறிவித்தல் என்று தொடங்கியதும் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. ஒவ்வொரு பெயராக வாசித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நீண்ட பட்டியல் வாசித்து முடிக்கப்பட்டது. பயப்பிடும்படியாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. ஒரு ஆறுதலாக இருந்தது. அன்று இரவு அப்படியே அடங்கியபடி கழிந்துபோயிருந்தது.

மறுநாள் 11.07.2001 அன்று எங்கள் வீட்டைத் தேடி போராளிகள் வந்தார்கள். அம்மா பதைபதைப்புடன் ஓடிச்சென்றார். போராளிகள் வீட்டைத் தேடி வந்தால் எல்லேரையும் அது பதற்றத்திற்கு உள்ளாக்கி விடும் என்பதை முன்னைய குறிப்nடிபான்றிலும் எழுதியிருக்கிறேன். வந்த போராளிகள் முதல்நாள் 10.07.2001 அன்று உங்கள் மகன் வீரமரணம் அடைந்துவிட்டார் என்று அம்மாவுக்கு சொன்னார்கள். அம்மா பேரதிர்ச்சியடைந்து புழுதியில் விழுந்து புரண்டு புரண்டு கத்திக்கொண்டிருந்தார். அம்மாவின் அழுகை எங்கள் குடியிருப்பு எங்கும் பரவிக்கொண்டிருந்தது. அண்ணாவின் இழப்பின் சோகத்தால் குடியிருப்பு உறைந்து போயிருந்தது. எங்கள் வீடு ஓவென்ற ஓலத்தால் நிரம்பிக்கிடந்தது. கனவு கனவு என்று அண்ணா அதற்காக தன்னையே கொடுத்துவிட்டான். எங்கள் வீடும் சிவப்பு மஞ்சள் துணிகளாலும் வாழை மரங்களாலும் அடையாளப்படுத்தப்பட்டது. அண்ணா வீரமரணம் அடைந்து விட்டான் என்பதை என்னால் நம்ப முடியாதிருந்தது. முதல் வாரம் திங்கட் கிழமை எங்களுடன் இருந்தவன். என்னுடன் அடிபட்டுக் கொண்டிருந்தவன். இந்த வாரம் திங்கட் கிழமைக்கிடையில் எல்லாம் முடிந்துபோய் விட்டது. இந்த வாரம் எங்களை விட்டுப் பிரிந்து போயிருந்தான். பேச்சற்ற வெற்றுடலாக வந்திருக்கிறான். நாற்பத்தைந்து நாட்கள் நிரம்பிய அண்ணாவின் குழந்தை எதையும் அறியாது கிடந்தது. அண்ணாவின் மனைவி அழுது அழுது மயங்கிக்கொண்டிருந்தாள். அண்ணா கனவுக்காக புதைக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் வீரர்களுடன் புதைக்கப்பட்டான்.



அண்ணா உன்னதமான இலட்சியம் கொண்ட மாவீரனாக வாழுகிறவன். அண்ணாவைப்போல உன்னதமாக புனிதமான உணர்வுடன் போரிட்டு கல்லறைகளில் நிரப்பட்டவர்களால் எங்கள் நிலம் வாழ்;வதற்காக அவாவுடன் நிமிர்ந்திருந்தது. அண்ணா காயமடைந்திருக்கும் பொழுது அவனுக்கு தலை முடி வெட்டிய முடி திருத்தகத்தைச் சேர்ந்தவர் என்னைக் கண்டு உங்களுடன் பேச வேண்டும் என்றார். அவர் மருத்துவ முகாங்களுக்கும் போராளிகளின் முகாங்களுக்கும் சென்று போராளிகளுக்கு முடி திருத்துபவர். அண்ணா காயமடைந்திருந்தபோது அவனுக்கு தான்தான் முடி திருத்தியதாகவும் அவன் தம்பியைப் பார்க்கவேண்டும் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று கத்தி அழுதுகொண்டேயிருந்ததாக அவர் எனக்கு சொன்னார். அண்ணாவின் அழுகையை பார்த்து தாங்க முடியாதபோதே போராளிகள் என்னை அண்ணாவுக்கு காட்ட அழைக்க வந்தார்கள் என்றார். நான் வாசலில் வந்து கொண்டிருந்தபொழுதுதான் அண்ணாவின் உயிர் பிரிந்திருந்தாகவும் அவர் சொல்லியபோது அவனைப் பார்க்கமலே அவனுடன் பேசாமலே பிரிந்த அனுப்பிய குற்றம் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. மணியன்குளம் சந்தியில் முடி திருத்தகம் வைத்திருக்கும் அவரின் கடையிலும் அண்ணா முடி திருத்தியிருக்கிறான்.


அண்ணாவின் மரணவீட்டுக்கு வந்த எங்கள் உறவினர்கள் அதற்கு பின்னர் எங்களுடன் முழு உறவையும் துண்டித்துக்கொண்டார்கள். சில உறவினர்கள் அன்றைய நாள் வரவே இல்லை. எந்த உறவினர்களுக்காகவும் நாங்களோ அண்ணாவோ காத்திருக்கவில்லை. அவர்களது அணுமுறைகள் சொற்களை கேட்டு புன்னாகிப்போன மனதுடன் வாழ்ந்துகொண்டிருக்கையில் அவர்களது உறவுத் துண்டிப்பு குறித்தே வருகை குறித்தோ நாங்கள் எந்தக் கவலையும் கொள்ளவில்லை. அண்ணா ஒரு உன்னதமான போராளியாக இருந்து மாவீரர் அடைந்தவன் என்பதை எல்லோரும் அறிந்திருந்தார்கள். சாதாரண வாழ்வை விட தியாகங்களை செய்யவும் துணிச்சல் மிக்க மனநிலையும் கொண்டவன் என்பதை எல்லோரும் அறிந்திருந்தார்கள். நான் சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாதிருந்ததினால் என்னை மீள பரீட்சைக்;கு தோற்றும்படி அண்ணா கூறயிருந்தான். அண்ணா மரணமடைந்து நான்கு நாட்களாகியிருந்தன. பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் திகதி முடிவடைந்துவிட்டது. எனினும் அண்ணாவுக்காக பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவாவுடன் எனது பாடசாலையான கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குச் சென்றேன். விண்ணப்படிவங்கள் எல்லாம் முமையாக பதிவு செய்து முடிவடைந்திருந்தது. அண்ணாவின் மரணம் காரணமாகவே பதிவு செய்ய முடியவில்லை என்பதனால் எனது பெயரை பதிவு செய்த பட்டியலின் இறுதியில் சொறுகி சேர்த்துக்கொண்டார்கள்.

வீட்டில் வறுமை காரணமாக அம்மா ஒரு வீட்டில் தங்கி நின்றுகொண்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். கிளிநொச்சி விவசாய விரிவாக்கப் பணிமனையின் பணிப்பாளர் சீதாலட்சுமி என்பவரின் வீட்டிலேயே அம்மா வேலை பார்த்தார். அம்மாவுக்கு ஆயிரம் ரூபா சம்பளமே ஒரு மாதத்திற்கு வழங்கப்பட்டது. நான் நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்கினேன். தங்கச்சியும் படித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் நானும் தங்கச்சியும்தான் தனியே இருந்தோம். அம்மாவைப் பிரிந்து அம்மாவின்; ஆயிரம் ரூபா பணத்தில் காலத்தை கழித்துக் கொண்டிருந்த அந்த நாட்களை மறக்க முடியவில்லை. அன்றைய பொருட்களின் விலை நிலவரத்தில் வெறும் அரிசி மடடுமே வாங்க அந்தப் பணம் போதுமாயிருந்தது. தங்கச்சி அப்பொழுது மூன்றாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். அம்மாவைக் கேட்டு அழுவாள். அமமாவைப் பார்க்க வேண்டும் என்று காத்திக்கொண்டிருப்பாள். அம்மா மாதத்தில் இரண்டு நாட்கள் வீட்டுக்கு வருவார். அந்த நாட்களுக்காக மிகுதி இருபத்தெட்டு நாட்களும் அவள் காத்திருப்பாள். அவள் அம்மாவைப் பிரிந்திருப்பதும் அவளது ஏக்கமும் அம்மாவுக்காக காத்திரப்பதும் என்னை கடுiயாக வாட்டிக்கொண்டிருக்கும். அவளை குளிப்பாட்டி உணவு சமைத்துக்கொடுத்து பாடசாலைக்கு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று விட்டு நான் பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்லுவேன். அந்த நாட்களில் இடம்பெயர்ந்து எங்கள் குடியிருப்பில் இருந்த லட்சுமியக்கா, மணியக்கா என்ற குடும்பங்கள் எங்கள் துன்பத்தை அறிந்தவர்கள். எங்களுக்கு ஆறுதல் தருபவர்கள். அவர்கள் தங்கச்சியைப் பார்த்துக் கொள்ளுவார்கள். நிறையவகையில் பல உதவிகளையும் நம்பிக்கைகளையும் தந்திருக்கிறார்கள்.


இப்படியே ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. நான் பரீட்சை எழுதி அதற்கான பெறுபேறும் வந்து விட்டது. கணித பாடத்தை புரிந்து கொள்ள கஷ்டமாக இருந்ததால் அந்தப் பாடத்தை படிப்பதையே நிறுத்தி விட்டு ஏனைய பாடங்களைப் படித்தேன். ஏனைய பாடங்களில் சித்தியடைந்ததினால் உயர்தர வகுப்பிற்கு செல்ல அனுமதி கிடைத்திருந்தது. எனினும் உயர்தரம் படித்துக் கொண்டு கணிதபாடத்தை மீளத் தோற்றி சித்தியடைய வேண்டும். இனி கணித்திலும் சித்தியடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் உயர்தரம் படிக்கலாம் என்று முடிவெடுத்துக் கொண்டேன். கிளிநொச்சியில் உள்ள எனது பாடசாலையான மத்திய கல்லூரிக்குச் சென்றே உயர்தரம் படிக்க வேணடும். கிளிநொச்சிக்கு செல்லுவதற்கான சூழலும் முழுயையாக வந்து விட்டது. இடம்பெயர்ந்து கிளிநொச்சியை விட்டு பெயர்ந்திருந்த அனைத்து மக்களும் கிளிநொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி சமாதான நகரமாகிக் கொண்டிருந்தது.


யுத்தத்தால் மிகுந்த பாதிப்புக்களை சந்தித்து நொந்து போயிருந்த தமிழ் மக்கள் சமாதானத்தை விரும்பினார்கள். அழிந்துபோன தேசத்தை உயிர் பெறச் செய்யவும் உயிழிப்புக்களையும் மரண அவலங்களையும் தவிர்த்துக்கொள்ளவும் அவர்கள் சமாதானத்தை விரும்பினார்கள். சமாதானம் என்றதும் எமது மக்கள் இனி யுத்தமும் அழிவும் அவலமும் அலைச்சலும் இல்லையென்று நினைத்துக் கொண்டார்கள். கிளிநொச்சி நகரமும் வன்னிப் பெருநிலமும் பெருமெடுப்பில் மீண்டு எழத்தொடங்கியது. கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளுக்கும் சர்வதேசப் பிரமுகர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் பேச்சுவார்த்தைகள் நடைபெறத் தொடங்கின. டெலிகப்படர்களில் சமாதானத்தின் தூதுவர்கள் வந்து ‘முற்றவெளி’ என்ற கிளிநொச்சி நகரத்தின் மையத்திலிருக்கிற மைதானத்தில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். வன்னி நிலமெங்கும் சருவதேச தொண்டு நிறுவனங்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட வாகனங்கள் பயணம் செய்து கொண்டிருந்தன.

ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய கால்திலிருந்து சமாதானத்திற்கான பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தகளும் நடந்து வந்திருக்கின்றன. பண்டராநயக்கா செல்வநாயம் ஒப்பந்தம் டட்லி சேனநாயக்கா வெல்வநாயகம் ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தகள் மிகக் குறுகிய கால்திலேயே கிழித் தெறியப்பட்டிருக்கின்றன. இலங்கையின் அரச தலைவர்கள் தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொள்ளத் தவறியதுடன் ஒடுக்குமுறைகளுக்கும் இன அழிப்புகுளக்குமே தங்கள் காலங்களை செலவிட்டிருக்கிறார்கள். இந்த ஒப்பந்தங்கள் யாவுமே தமழி ;மக்களை அலைக்கழித்து ஏமாற்றியிருந்தன. தமிழ் மக்களின் வாழ்வுரிமையைப் பெற்றுக் கொள்ளுவதற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த ஈழப் போராட்ட அமைப்புக்கள் மீள மீள பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டிருந்தன. வரலாற்றின் அணைத்து ஈழப் பேராhட்ட அமைப்புக்களும் இணைந்து கலந்து கொண்ட ‘திம்புப்பேச்சுவார்த்தை’ 1985ஆம் ஆண்டு ஜீலை 8 இல் ஆரம்பமாகி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.


இந்திய அரசின் அனுசரனையுடன ஜவர்த்தன உட்பட பத்துப்பேருடன் ஈழ விடுதலைப் பேராட்ட அமைப்புக்களைச் சேர்ந்த பேராளிகளாக விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அன்ரன் மற்றும் திலகரும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமையிலிருந்து வரதராஜப்பெருமாள் மற்றும் கேதீஸ்வரனும், ரெலோ அமைப்பிலிருந்து சாள்ஸ்அன்ரனிதாஸ் மற்றும் மோகனும், ஈரோஸ் அமைப்பிலிருந்து ராஜிசங்கர் மற்றும் ஈ. இரத்தினசபாபதியும் புளொட் அமைப்பிலிருந்து வாசுதேவா மற்றும் தருமலிங்கம் சித்தார்த்தனும் த.ஐ.வி.மு அமைப்பிலிருந்து சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் மற்றும் சம்பந்தனும் கலந்து கொண்டார்கள் அனைத்து இயக்கங்களும் தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்பனவற்றை வலியுறுத்தியிருந்தன. முதலாவதாக நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தால் கோரிக்கைள் நிராகரிக்கப்பட்டதினால் தோல்வியில் முடிவடைந்தது. அனைத்து இயக்கங்களும் இணைந்து கொண்ட இந்தப் பேச்சுவார்த்தை வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொண்டது. இதன் பிறகு 1995 ஜனவரி 3ஆம் நாள் சந்திரிகா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் நடைபெற்ற சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையாக சந்திரிகாவில் பிரகடனம் செய்யப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையும் பிறகு தோல்வியில் முடிவடைந்திருந்தது. அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து புலிகள் ஒரு தலைப்பட்சமாக விலகியதை அடுத்து சந்திரிகா அரசு அப்போது யுத்தத்தை தொடங்கியிருந்தது.

தமீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 23.02.2002 நாளிலிருந்து யுத்தம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தமிழ் மக்கள் இந்த யுத்த நிறுத்தம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நிரந்தரமான அமைதியை தரும் என்று நம்பினார்கள். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுக்கள் வடக்கு கிழக்கில் தமது கண்காணிப்பு அலுவலகங்களை நிறுவினார்கள். சோதனைச் சாவடிகள் திறந்து மக்கள் போக்குவரத்துகளில் ஈடுபட்டார்கள். தடைசெய்யப்பட்ட பொருட்களில் அநேகமானவை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அப்பொழுது இராணுவத்தின் பகுதிகளுக்கும் புலிகளின் பகுதிகளுக்கும் இடையில் மண்டூர், பட்டிருப்பு, களுதாவெளி வள்ளத்துறை, அம்பலந்தீவு வள்ளத்துறை, மண்முனை வள்ளத்துறை, வவுணத்தீவு, கரும்பாலம், சித்தாண்டி படகுத்துறை, கிரான் பாலம், கிண்ணியடி படகுத்துறை, வாழைச்சேனை, மாங்கேணி, மகிந்தபுரம், மூதூர், உயிலங்குளம், ஓமந்தை முதலிய சோதனைச் சாவடி நிலையங்கள் திறக்கப்படடன. இறுக்கமான விதிகளுடன் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஒரு பகுதிக்குள் இருந்து மற்ற கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்லப்படுகிற பொருட்கள் முதல் போராளிகள் இராணுவ அதிகாரிகள் செல்லுவது வரையான விதிகளையும் போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டிருந்தது.

நான் உயர்தரம் படிப்பதற்காக கிளிநொச்சிக்கு திரும்பி வந்தேன். அப்பொழுது கிளிநொச்சியில் எங்களுக்கு வீடு கட்டுவதற்கும், காணி துப்புரவு செய்வதற்கும் வசதியற்றிருந்தது. எங்களுக்கு வீடற்றிருந்தது. அம்மா எங்கோ இருக்க நான் எங்கோ இருக்க தங்கச்சியையும் பிரிந்துவிட நேர்ந்தது. வறுமையாலும் வீடில்லாததாலும் பல துன்பங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. தங்கச்சியைத் தான் வைத்து பார்ப்பதாக அண்ணாவின் மரணவீட்டில் வைத்துச் சொல்லிய அம்மாவின் இரண்டாவது சகோதரி ஒரு கிழமையிலேயே தங்கச்சியை கூட்டிச்செல்லுமாறு என்னிடம் சொல்லிவிட்டார். அப்பொழுது தங்கச்சிக்கு எட்டு வயதுதான். உயர்தரம் படித்து முடிக்கும் வரையில் என்னை பார்ப்பதாக சொல்லிய அப்பாவின் சின்னம்மாவின் வீட்டிலும் பதினைந்து நாளுக்கு மேல் இருக்க முடியவில்லை. இரவு ஒன்பது மணிக்குப் பிறகு படிக்க வேண்டாம் என்ற அவரது கட்டளையிட்டதுடன் பிறகு அவரது கொடுமையான சொற்களாலும் நடவடிக்கையாலும் மனமுடைந்துபோயிருந்தும் அவராகவே என்னை தன் வீட்டிலிருந்து வெளியேற்றினார்.

கிளிநொச்சி திருவையாற்றில் இருக்கிற சின்னப்பெரியம்மா வீட்டிலிருந்து தங்கச்சியை எனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்தேன். எனது சைக்களின் பின்னால் இருந்து தங்கச்சி அழுதுகொண்டேயிருந்தாள். அவள் தன்னைக் ‘குருகுலம்’ என்ற சிறுவர் இல்லத்த்தில் விட்டுவிட்டு என்னைப் படிக்கும்படி சொன்னாள். யுத்தத்தாலும் குடும்ப பிரிவுகளாலும் பிறவழிகளிலும் பெற்றோர்களை இழந்த பி;ள்ளைகள் அங்கு படித்தக் கொண்டிருந்தார்கள். பல மாணவிகள் குருகுலம் கருணாநிலையம் என்ற இல்லங்களிலிருந்து வந்து எனது வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தார்கள். அடுத்த நாளே தங்கச்சியை குருகுலம் சிறுவர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வந்தேன். தங்கச்சி மிகுந்த மென்மையானவள். எட்டு வயது என்றபோதும் நான்கு வயது மாதிரிதானிருப்பாள். அம்மா அல்லது நான் அவளுக்குப் பக்த்தில் இருக்க வேணடும். அவளை அந்த இல்லத்தில் சேர்த்துவிட்டு திரும்பும் பொழுது அழுகையே எனக்குப் பீறிட்டுக்கொண்டிருந்தது. நானும் அப்பாவின் சின்னம்மா வீட்டிலிருந்து வெளியேறி ஒன்றுவிட்ட அண்ணா ஒருவரின் வீட்டிலிருந்து படிக்கத் தொடங்கினேன். அம்மாவின் வயதையே உடைய அந்த ஒன்றுவிட்ட அண்ணா மிகுந்த இரக்கமும் அன்பும் கொண்டவர். கிளிநொச்சியில் இராணுவம் நிலைகொண்டிருந்தபோது வீட்டிற்கு வரும்பொழுது அவர் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பதை முன்னைய குறிப்பொன்றில் எழுதியிருந்தேன். கோணேஸ்வரி எனப்படுகிற அந்த அண்ணாவின் மனைவி என் அம்மாவைப்போலவே என்னை கவனித்து வந்தார்.

அவர்களின் வீடு கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் இருக்கிறது. எங்கள் தெருவுக்கு ‘நீக்லஸ் வீதி’ என்றே பெயரிடப்பட்டிருந்தது. நீக்லஸ் என்பவர் இங்கு குறிப்பிட்ட அண்ணாவின் தம்பி. ஈழத்துக்கு வந்த இந்திய இராணுவத்தினருடன் ஏற்படட மோதலில் காயமடைந்தவேளை தமிழகத்தில் வைத்து மருத்துவம் செய்து உயிர் தப்பியிருந்தார். மிகச்சிறிய வயது ஞாபகங்களாக அவர் களவாக வீட்டுக்கு வந்து செல்லுவது இப்பொழுதும் இருக்கிறது. காலையில் எங்கள் ஊரிலுள்ள இளைஞர்களை எல்லாம் இந்திய இராணுவம் வரிசையாக அழைத்துச் செல்லும். இரவுகளில் இந்திய இராணுவம் போராளிகளை மோப்பம் படித்தபடி அலைந்து கொண்டிருக்கும். இரவு மிகுந்த அச்சம் தருவதாகவே இருக்கும். யாரும் வெளியில் வருவதில்லை. பெரியம்மாவும் அம்மாவும் அவரை பக்கத்திலிருக்கிற காட்டு ஆறு ஒன்றுக்குள் வைத்தே பார்ப்பார்கள். என்னில் மிகுந்த பிரியம் கொண்டவர். சில நாட்களிலேயே இந்திய இராணுவத்தினருடன் ஏற்பட்ட மற்றுமொரு சமரில் அவர் வீரமரணம் அடைந்திருந்தார். அவரது வீரமரணத்தால் பெரியம்மா மிகவும் மனமுடைந்துபோய் பின்னர் இறந்துபோயிருந்தார்.

பாதைகள் திறக்கப்பட்டு வி;ட்டன. மிக நீண்டகாலமாக பூட்டப்பட்டிருந்த ஏ-9 வீதி திறக்கப்பட்டது. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய பகுதிகளுக்கும் சனங்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்கு போகத் தொடங்கினார்கள். யாழ்பபாணத்திற்கான தரை வழிப் பாதையான ஏ-9வீதி பன்னிரண்டு வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டது. யுத்தம் மூளுகிற காலங்களிலும் உக்கிரமடைகிற காலங்களிலும் இந்தப் பாதை மூடப்பட்டிருப்பதுடன் ஏ-9 வீதி முழுமையாக சனங்களால் பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கிறது. போன போன இடங்களுக்குள் சிக்கிய பகுதிகளுக்குள் முடங்க வேண்டியதுதான். தொடர்புகள் பயணங்கள் நடைபெறுவதில்லை. கடல் வழியாக கிளிhலி போன்ற ஆபத்தான பயணங்கள் இடையில் நடந்திருக்கின்றன. அப்பொழுது இலங்கை கடற்படையினரால் கடலில் வைத்து பல நூற்றுக்கணக்கான மக்கள் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பு கண்டி என்று ஏனைய பகுதிகளுக்குமான பேருந்துகளும் கஜஸ் வாகனங்களும் என்று எப்பொழுதும் ஏ-9 வீதி கலகலப்பாகவே இருந்தது. யுத்தத்தால் முற்றாக சிதைத்து நொருக்கிய வீதி புனரமைக்கப்பட்டு வாகனங்களால் நிரம்பிக்கிடந்தது. படிப்பபடியாக கட்டிடங்கள் எழும்பிக் கொண்டிருந்தன. கிளிநொச்சி நகரம் வசீகரமான தோற்றத்தைப் பெற்றுக் கொண்டிருந்தது. கிளிநொச்சி நகரத்தை மக்களும் பேராளிகளும் இணைந்து அதிசயிக்கிற வித்தில் கட்டி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன. சமாதானம் யுத்தத்தால் சிதைந்த நகரத்தை புனரமைத்துக் கொண்டிருந்தது. தெருக்கள் அழகாயின. வயல்களும் தோட்டங்களும் குளிர்ச்சியுடன் உயிர்;பெற்றன. வீடுகள் அழகாக எழும்பி உயர்ந்து கொண்டிருந்தன.

கிளிநொச்சி சமாதான நகரமாயும் ஈழக்கனவின் தலைநகரமாயும் உலகத்தின் கவனத்தைப்பெற்றது. கிளிநொச்சியை தங்கள் இராஜதந்திர நகரம் என்று புலிகள் சொன்னார்கள். சமாதானத் தூதுவர்கள் எப்பொழுதும் கிளிநொச்சிக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். பேச்சு வார்த்தைகள் நடக்கத் தொடங்கின. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முதலாவது பேச்சுவாhத்தை நேர்வேயின் அனுசரணையுடன் தாய்லாந்தில் 2002 செப்டெம்பர் 16 முதல் 18 வரை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் தரப்பில் அன்ரன் பாலசிங்கம் தலமையில் விஸ்வலிங்கம் உருத்திரக்குமார், ஜெ. மகேஸ்வரன் , அடேல் பாலசிங்கம் முதலியவர்களும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜி.எல் பீரிஸ் தலமையில் மிலிந்த மொரகொட, ரவுஃவ் அக்கீம், பேர்நாட் குணதிலகா முதலியவர்களும் கலந்து கொண்டார்கள்.

இங்கு கண்ணிவெடிகளை அகற்றுவது பற்றியும் உள்நாட்டு அகதிகளை மீளக் குடியித்துவது பற்றியும் பேசப்பட்டது. பேச்சுவார்த்தையில் நோர்வே நாட்டைச் சேர்ந்த விடார் எல்கீசன், யோன் வெஸ்ட்பேக், எரிக் சொல்யேம் முதலியவர்கள் நடுவு நிலையாளர்களாக பங்கு வகித்தார்கள். அடுத்த கட்டப் பேச்சு வார்த்தைகள் அக்டோபர் 31 முதல் செம்படம்பர் 03 வரை தாய்லாந்தின் நாக்ரோன் பத்தொம் நகரில் நடைபெற்றது. இதில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் தளபதி கருணாம்மான் எனப்படும் முரளிதரனும் விடுதலைப்புலிகள் சார்பில் கலந்து கொண்டார்கள். அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நோர்வேயின் ஒஸ்லோ நகரில் 2002 டிசம்பர் 2 முதல் 5 வரை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தப் பேசப்பட்டன.

தொடர்ந்து நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தை தாய்லாந்திலும் ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை ஜோமனியிலும் ஆறாம் சுற்றுப் பேச்சு வார்த்தை யப்பானிலும் நடைபெற்றது. பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதானத்தில் நம்பிக்கை இருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் ஈழப் போராட்டத்தை நசுக்கவே சமாதானத்தை பயன்படுத்துகிறது என்று அவர்கள் கருதினார்கள். பேச்சு வார்த்தைக் காலத்தில் தங்கள் ஆயுத ஆட்பலங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கிக்கொண்டிருந்தார்கள். பேச்சு வார்த்தைகள் ஒவ்வொரு சுற்றுக்களாக நடந்து 2005 அளவில் முறிவுகள் ஏற்படத்தொடங்கின. இரண்டு தரப்புக்களும் நம்பிக்கையை இழந்து யுத்தத்தில் நம்பிக்கையை வைத்தபடி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

நான் எனது படிப்பிற்காக தனியான கொட்டில் ஒன்றை அமைத்துக்கொண்டு தனியே இருந்து படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பில் அதிகூடிய புள்ளிகள் எனக்கே கிடைத்துக் கொண்டிருந்தன. பாடசாலையில் எனக்கு அனைவரது ஒத்துழைப்பும் கிடைத்தது. எனது வறுமை நிலவரம் தெரிந்ததில் பாடசாலை ஆசிரியர்கள் அதிபர் எனது மாணவர்கள் என்று அனைவரும் என்மீது அன்பு செலுத்தி கல்வியில் முன்னேற ஒத்துழைத்தார்கள். காலையில் படித்துவிட்டு ஒவ்வொரு நாளும் பாண்துண்டுகளை சாப்பிட்டுவிட்டுத்தான் பள்ளிக்கூடம் செல்லுவேன். தாமதமாக வந்தாலும் எனக்காக வகுப்பே காத்துக்கொண்டிருக்கும். கவிதை, கட்டுரை போன்ற பேட்டிகளிலும் பங்கு பற்றி வென்று வருவது பாடசாலையினருக்கு மகிழ்ச்சியையே கொடுத்திருந்தது.


இந்தக் காலத்தில் எனக்கு என் பாடசாலையில் கல்வி கற்பித்த சசிந்தா இராஜநாயகம் என்ற ஆசிரியர் நம்பிக்கையையும் தந்து சரியான கல்வியை கற்கிற வழிகளையும் காட்டியிருந்தார். உயர்தரத்தில் படித்துக் கொண்டிருக்கிறபோது நான் சாதாரணதரத்தில் சித்தியெய்த வேண்டியிருந்த கணிதபாடத்திற்காக பரீட்சையை எழுதியருந்தேன். கணிதபாடம் எனக்கு பிடிபடாமல் இருந்தபோது கிளிநொச்சி உருத்திரபுரத்தில் உள்ள கேதீஸ் என்ற ஆசிரியரிடம், கிளிநொச்சியிலிருந்து எட்டுக் கிலோமீற்றர் தூரத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று படித்து வந்து கொண்டிருந்தேன். காலையிலும் மாலையிலும் ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரையும் அவருடைய வகுப்பிற்கு சைக்கிளில் மிதித்து சென்று வருவேன். கணிதபாடத்தில் மிகுந்த பரீட்சியமும் தெளிவும் ஏற்பட்டது. கணிதபாடத்தின் பெறுபேறு வந்தது. எனக்கு அதிசிறப்புப் பெறபேறான ‘ஏ’ பெறுபேறு கிடைத்திருந்தது.


நான் உயர்தரம் படித்து முடித்து பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்தேன். 2004 ஏப்ரல். இந்த நாட்களில்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்குத் தளபதி கருணா அம்மான் பிரிந்து சென்றார். ஈழ மக்கள் நேசித்த தளபதிகளில் கருணாவும் ஒருவர். அவரது பிரிவு நடவடிக்கை ஈழ மக்களை கடுமையாக பாதித்திருந்தது. வன்னியில் நடந்த பல சமர்களின் வெற்றிக்கு தளபதி கருணாவின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அவரது பிரிவால் விடுதலைப்புலிகளின் இராணுவபலத்தில் ஒரு பகுதி இல்லாமலே போயிருந்தது. கருணாவின் பிரிவு தமது பலத்தை பாதிக்கும் என்று அறிந்தபொழுதும் கருணாவுக்கும் தமது இயக்கத்திற்கும் இனி தொடர்புகள் இல்லை என்று விடுதலைப்புலிகள் சொன்னார்கள். கருணாவுடன் பேசி தொடர்ந்து அவரை இயத்தில் வைத்திருக்கலாம் என்றே மக்கள் அப்பொழுது கூறினார்கள். எல்லாம் நடந்தேறியபோதும் கருணா பிரிந்து செல்ல மாட்டார் என்று அநேகமான மக்கள் நம்பியிருந்தார்கள். ஆனால் கருணாவிடமிருந்து கிழக்கை மீட்க நடந்த சகோதரர்கள்மீதான யுத்தமே இன்றுவரை கிழக்கு மக்களின் மனங்களில் மாறாத வடுவாக இருக்கிறது. கிழக்கு மக்கள் எதிர்பார்த்திருக்காதபடிதான் கருணாவின் முடிவு அமைந்திருந்தது. அப்பொழுதும் கிழக்கு மக்கள் விடுதலைப்புலிகளுக்கு மிகுந்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தார்கள். கிழக்கில் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை முதலிய மாவட்டங்களில் கடற்கரையை அண்டிய பிரதேசங்கள் விடுதலைப்புலிகளின் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.

உயதர்தரப் பரீட்சை முடிந்து பெறுபேறுகள் வந்தது. அதிவிசேட பெறுபேறுகளைப் பெற்று நான் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தேன். அம்மா மகிழ்ச்சியில் மிகுந்திருந்தார். தான் பட்ட கஷ்டங்கள் அகழப்போகிறது என்று அம்மா நினைத்துக்கொண்டிருந்தாள். பிரார்த்தனைகளைக் கேட்ட தனது கடவுளருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டிருந்தார். அம்மாவை போராளிகளின் குழந்தைகளை பராமரிக்கிற வேலை ஒன்றுக்காக போராளிகள் அழைத்துச் சென்றார்கள். தங்கச்சியை குருகுலம் இல்லத்திலிருந்து அழைத்துக்கொண்டு வீட்டுக்கு கூட்டி வந்து விட்டோம். அவள் எங்களைப் பிரிந்து மிகவும் மெலிந்து போயிருந்தாள். அடிக்கடி சந்திப்பதனால் படிப்பு குழம்பிவிடும் என்பதனால் அவளை மாதத்தில் ஒருமுறை பார்;க்கவே அனுமதிப்பார்கள். அம்மா வேலையிலிருந்ததினால் அடிக்கடி நானே சென்று அவளைப் பார்த்துவிட்டு வருவேன். அவளைப் பார்த்துவிட்டு திரும்பும் ஒவ்வொரு முறையை எங்களுடான பிரிவை அவள் எப்படித் தாங்குகிறாள் என்ற துயரத்தால் கண்ணீருடனே திரும்புவேன். நானும் அம்மாவும் தங்கச்சியும் பிரிந்திருந்து இப்பொழுது ஒன்று சேர்ந்து விட்டோம்.

நான் யாழ்ப்பாண பல்கலைக் கழகற்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாக கடிதம் வந்தது. 2005 பெப்ருவரி 02ஆம் நாள் எனக்கான வகுப்புக்கள் தொடங்கியிருந்தன. நான் முகமாலை வழியாக யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். சிறிய வயதில் ஆனையிறவைக் கடந்து யாழ்ப்பாணம் போனதிற்கு பிறகு அதாவது நீண்ட காலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் சென்றேன். யாழ் நகரத்திற்கு செல்லும் போது எல்லா இடங்களிலும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

 நன்றி: உயிர்மை ஜனவரி 2010